உலகின் 2வது ஸ்டார்அப் மையம் இந்தியா..ஐஐடி மாணவர்களே காரணம்.. பிரதமர் மோடி பெருமிதம்
உலகின் இரண்டாவது பெரிய ஸ்டார்ட்அப் தொழில் மையமாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக பிரதமர் மோடியும் அவ்வப்போது உத்தரபிரதேசம் சென்று வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்து வருகிறார்.
இந்தநிலையில், கான்பூர் சென்ற மோடி, 54வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். பின்னர் 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை மோடி பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். சுமார் 32 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மெட்ரோ ரயில் சேவையை பார்வையிட்ட அவர், ஐஐடி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
முன்னதாக பட்டமளிப்பு விழாவில் பேசிய மோடி, உலகளவில் இந்தியா இரண்டாவது பெரிய ஸ்டார்ட்அப் தொழில் மையமாக உருவெடுத்துள்ளது என கூறினார். இதற்கு ஐஐடி மாணவர்களே காரணம் என பாராட்டினார். இந்தியா தனது 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, தற்போதைய பட்டதாரி மாணவர்களின் பங்களிப்பும் இடம் பெறும் என கூறினார்.