முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்ட முடியாது - மத்திய அரசு  திட்டவட்டம்

முல்லைப் பெரியாறு அணைக்கு கீழே புதிய அணை கட்டுவதற்கு தமிழ்நாடு-கேரளா  அரசுகளின் சம்மதம் தேவை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு  திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்ட முடியாது - மத்திய அரசு  திட்டவட்டம்

முல்லைப் பெரியாறு அணை: ஜான் பிரிட்டர்ஸ் எழுத்துப்பூர்வமாக கேள்வி:

முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசு புதிய அணை கட்டுவது தொடர்பாக முன்மொழிந்து உள்ளதா? அப்படி என்றால் அது தொடர்பான விவரங்கள் என்ன என மாநிலங்களவை  உறுப்பினர் ஜான் பிரிட்டர்ஸ் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பதில்:

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் டூடு, தற்போது உள்ள முல்லைப் பெரியாறு அணையின் கீழ்ப்பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு முன்மொழிந்து உள்ளதாக பதில் அளித்தார்.

மேலும் முல்லைப் பெரியாறு வழக்கில் கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இரண்டு மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டால் மட்டுமே அந்த பகுதியில் புதிய அணை கட்ட முடியும் என தெரிவித்து உள்ளதை மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில் சுட்டிக்காட்டினார்.

முல்லை பெரியாறு அணை:

இருப்பினும், முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டத்தை தயாரிப்பதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியதாகவும், தமிழ்நாடு - கேரளா இடையே பரஸ்பர ஒப்பந்தம் என்பது சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு முன்னர் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கேரள அரசு முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவது தமிழக அரசின் சம்மதம் இல்லாமல் நடைபெறாது என மத்திய அரசு மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தி உள்ளது.