விவசாயிகள் தொடர் போராட்டம் முடிவுக்கு வருகிறது?

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக விவசாயிகளின் 5 பேர் கொண்ட குழு கூடி ஆலோசிக்க உள்ளது. 

விவசாயிகள் தொடர் போராட்டம் முடிவுக்கு வருகிறது?

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 40 விவசாய சங்கங்கள், டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சட்டங்களை திரும்பப் பெறுவதாக, பிரதமர் மோடி கடந்த நவம்பர் கடைசி வாரம் அறிவித்திருந்தார். அதன்படி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அதற்கான மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

எனினும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம், போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, மின்சார திருத்த சட்டம், பதர்கள் எரிப்பதை கிரிமினம் குற்றத்தில் சேர்க்க கூடாது உள்ளிட்ட பல புதிய கோரிக்கைகளை முன்வைத்து, விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக, மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கவேண்டும் என பிரதமருக்கு விவசாயிகள் சங்கத்தினர் கடிதம் எழுதினர். அதன்படி விவசாய சங்க தலைவர் பல்பிர் சிங் ராஜேவால், தலைமையில் ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் நேற்று மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் விவசாயிகளின் பெரும்பான்மையான கோரிக்கைகளையும் மத்திய அரசு நிறைவேற்றுவதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெற விவசாயிகள் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்க விவசாயிகளின் 5 பேர் கொண்ட குழு  கூடி இறுதி முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.