ஓடும் பேருந்தில் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை!!
டெல்லி நிர்பயா போன்று பீகாரில் மீண்டும் ஒரு பாலியல் சம்பவம் அரங்கேறியுள்ளது. பேருந்தில் பயணித்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து ஓட்டுநர் மற்றும் அவரின் நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
2012ம் ஆண்டு டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி மிக கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனை மக்கள் இன்றளவும் மறந்திருக்க வாய்ப்பில்லை. நிர்பயாவை சின்னாபின்னமாக்கிய குற்றவாளிகள் நீண்ட சட்டபோராட்டத்துக்கு பிறகு கடந்த ஆண்டு தூக்கிலிடப்பட்டனர்.
இந்த நிலையில் இதேபோன்று பீகாரில் கூட்டு பாலியல் வன்கொடுமை அரங்கேறியுள்ளது. பீகாரில் ஓடும் பேருந்தில் சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உதவியாளர் மற்றும் ஓட்டுனரின் நண்பர்கள் ஒன்று சேர்ந்து கூட்டு பாலியல் செய்துள்ளனர்.
பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் பெட்டியா நகரில், பேருந்திலிருந்து அரை மயக்கத்துடன் சிறுமியை போலீசார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து விசாரணை நடத்தியதில் பேருந்தின் ஓட்டுநர், அவரின் உதவியாளர்கள் தனக்கு குடிப்பதற்கு குளிர்பானம் வழங்கியதாகவும் அதனை குடித்த பிறகு மயக்கத்துடன் இருந்த தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.