கிணற்றில் வீசபட்ட குழந்தையை ஊர் கூடி மீட்ட நெகிழ்ச்சி சம்பவம்!!!
பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையை 30 அடி கிணற்றில் தூக்கி வீசி சென்ற மர்ம நபர்கள். உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குழந்தையை உயிருடன் மீட்ட கிராம மக்கள்.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் பாண்டவபுரா என்ற பகுதியில் நேற்று மாலை கிராம மக்கள் தங்களது விவசாய நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது தூரத்தில் இருந்து குழந்தை ஒன்று அழும் குரல் கேட்ட நிலையில் தங்களது வயல்வெளியை முழுவதுமாக கிராம மக்கள் சோதனை செய்து பார்த்தனர்.
அருகில் இருந்த கிணற்றிலிருந்து குழந்தையின் அழுகை குரல் கேட்பதை கண்ட கிராம மக்கள் 30 அடி ஆழம் கொண்ட கிணற்றை எட்டிப் பார்த்தபோது அதில் குழந்தை ஒன்று மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக கயிறைக் கட்டி விவசாயிகள் சிலர் கிணற்றுக்குள் இறங்கி குழந்தையை பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். உடனடியாக அருகில் இருந்த ஆரம்ப சுகாதார மையத்திற்கு குழந்தையை எடுத்துச் சென்று மருத்துவர்களிடம் காண்பித்த போது குழந்தைக்கு முதுகில் சில இடங்களில் கீறல்கள் இருந்ததே தவிர மற்றபடி எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்பு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தைக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்ட பிறகு குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை ஈவு இரக்கம் இன்றி 30 அடி கிணற்றில் தூக்கி வீசி சென்ற மர்ம நபர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#Viral | கிணற்றில் வீசபட்ட குழந்தையை ஊர் கூடி மீட்ட நெகிழ்ச்சி சம்பவம்!!!#Karnataka #KarnatakaViral #BabyRescue #Issue #Malaimurasu #MalaimurasuNews pic.twitter.com/YOAgGJFbyA
— Malaimurasu TV (@MalaimurasuTv) September 17, 2022