ஆம்புலன்ஸ் கதவு திறப்பதில் சிக்கல்...! பரிதாபமாக உயிரிழந்த நபர்...!
கேரள மாநிலத்தில் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கிய நபர், ஆம்புலன்ஸின் கதவு திறக்க தாமதமானதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம் ஃபெரோக்கைச் சேர்ந்த கோயமோன் (66) என்பவருக்கு திங்கட்கிழமை அன்று, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆம்புலன்ஸ் கதவு கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாக திறக்கப்படாததால், காயமடைந்தவரை விபத்து பிரிவில் சேர்ப்பதில் கால தாமதம் ஏற்ப்பட்டது. மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுனரும், உதவியாளரும் ஆம்புலன்ஸ் கதவை திறக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் திறக்க முடியாததால், காயமடைந்த நபர் பரிதாபமாக உயிரிழக்க காரணமாக அமைந்தது.
பின்னர், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, ஆம்புலன்சின் உள்ளே இருந்து கதவை திறந்தனர். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து மருத்துவமனையில் இருந்து இதுவரை தங்களுக்கு தகவல் வரவில்லை என்று மருத்துவக் கல்லூரி போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.