சதம் அடித்தது,.. தக்காளி விலை..! கவலையில் வியாபாரிகள்.
ராமநாதபுரத்தில் 14 கிலோ தக்காளி பெட்டிக்கு 1500 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. சதம் அடித்த தக்காளி விலையால் சாதாரண மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் நகரில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு காய்கறி பலசரக்கு சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய உணவு பொருள்களை விற்பனைக்காக சில்லறை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். மேலும், காய்கறி மார்க்கெட்டில், மற்றும் சாலையோர வியாபாரிகளிடம் முக்கிய இடம் பிடித்திருக்கும் தக்காளி நாளுக்கு நாள் விலை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.
சைவ, அசைவ உணவுகளுக்கு தக்காளி இல்லாத சமையல் இல்லை என்று சொல்லலாம். அந்த வகையில் அனைத்து உணவுகளோடு சேர்க்கக் கூடிய வகையில் தக்காளி உள்ளது. இவ்வாறிருக்க, தற்போது விளைச்சல் குறைவு காரணமாக நாளுக்கு நாள் விலை அதிகரித்துக் கொண்டு போகிறது. ராமநாதபுரம் நகரில் 14 கிலோ எடையுள்ள பெட்டி 1300 முதல1500 வரை விற்பனையாகிறது. சாலையோர வியாபாரிகள் தக்காளி கிலோ 120 முதல் 140 வரை விற்பனை செய்கின்றனர்.
சூப்பர் மார்க்கெட்டுகளில் தக்காளி விலை 100-க்கு மேலேயே விற்பனை செய்கின்றனர்.கடந்த மாதம் தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 130 ரூபாய்க்கு விற்பனையாவதால் சாதாரண, ஏழை, நடுத்தர மக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தக்காளி விலை உயர்வால் சாலையோர வியாபாரிகளின் வியாபாரம் முழுமையாக பாதித்துள்ளதாகவும் ஒரு கிலோ தக்காளி வாங்குபவர்கள் தற்போது 100 கிராம் மட்டுமே வாங்கி செல்வதாக கூறுகின்றனர். காலை முதல் மாலை வரை வெயிலில் நின்ற நிலையில் வியாபாரம் செய்தாலும் போதிய வருமானம் கிடைக்கவில்லை என கூறுகின்றனர்.
தக்காளி மொத்த வியாபாரத்தை பொருத்தமட்டில் ஒவ்வொரு மொத்த வியாபாரியும் இரண்டு டன் வரை விற்பனை செய்ததாக, தற்போது ஒரு டன் அளவு விற்பனை ஆவதாக கூறுகின்றனர். விலையேற்றத்தால் விற்பனை குறைந்தாலும் நடைமுறை செலவுகளான ஏற்றி இறக்குவதற்கான கூலி வண்டி வாடகை என அனைத்தும் அதே அளவில் உள்ளதால் நஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும் இதே நிலை நீடித்தால் தக்காளி வியாபாரம் செய்வது குறைந்து விடும் என தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசு தக்காளி விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வந்து சாதாரண மக்களும் வாங்கி சாப்பிடும் வகையில் விலையை குறைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகின்றனர்.
இதையும் படிக்க | அலட்சியமாக உறங்கிய செவிலியர்கள்...மருத்துவ உதவி கிட்டாமல் உயிரிழந்த குழந்தை!!