"ஜில் ஜிலுன்னு" இருப்பதை பார்த்து மக்கள் ஏமாந்து விடுகிறார்கள்” - அமைச்சா் காந்தி

"ஜில் ஜிலுன்னு"  இருப்பதை பார்த்து மக்கள் ஏமாந்து விடுகிறார்கள்” -  அமைச்சா் காந்தி

கூட்டுறவு விற்பனையை ஆயிரம் கோடி ரூபாயாக அதிகாிப்போம் என அமைச்சா் காந்தி நம்பிக்கை தொிவித்துள்ளாா்.

தமிழ்நாடு  அரசின்  கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் கீழ்  2 கோடி 50 லட்சம் மதிப்பீடில்  காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயில் தெருவில், கட்டப்பட்டுள்ள காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு  சங்கத்தின்,  புதிய விற்பனை நிலையத்தினை  குறு, சிறு  நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை  அமைச்சர் தா.மோ.அன்பரசன்  தலைமையில்,  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி  இன்று  திறந்து வைத்தார்.  

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் காந்தி தெரிவித்ததாவது :

”கூட்டுறவு சங்கங்கள் மூலம் உருவாக்கப்படும் பட்டுகள் தான் உண்மையான கைத்தறி பட்டுகள். இந்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் உருவாக்கப்படும் பட்டுக்களில் தான் தங்கத்தின் அளவு, வெள்ளி அளவு, ஆகியவற்றுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

கூட்டுறவு துறைகளில் வழங்கப்படும் பட்டுப் புடவைகளை 6 மாதம் கழித்து கொண்டு வந்தால், சந்தையைப் பொறுத்து விலை அதிகரிக்கும்.  திமுக அரசு அமைந்த பிறகு தான், நவீன முறையை கொண்டு வந்துள்ளோம். கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் திமுக அரசு வந்த பொழுது, 7 கோடி நஷ்டத்தில் இருந்தது, பின்னர் அதனை  9 கோடி ரூபாய் லாபமாக  கொண்டு வந்துள்ளோம்”,  என கூறினார்.

தொடர்ந்து பேசுகையில்,  ”கூட்டுறவு பட்டு சங்கங்கள் மூலம் வருவாய்களை அதிகரிக்க இந்த அரசு முயற்சி எடுத்து வருகிறது. 150 கோடியாக இருந்த விற்பனையை 200 கோடியாக உயர்த்தினோம். இந்த ஆண்டு 400 கோடி இலக்கு வைத்துள்ளோம். இதை நாங்கள் 1000 கோடியாக அதிகரிப்போம். காமாட்சி அம்மன் பட்டு கூட்டுறவு  விற்பனையை, 10 கோடியை 13 கோடியாக அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டினார்.

நலிவடைந்த சங்கங்களுக்கு ரூபாய் முதலீடுகள் கொடுத்து, தொடர்ந்து நலிவடைந்த சங்கங்களை மீட்டெடுக்கும் முயற்சியில், ஈடுபட்டு வருகிறோம். கைத்தறி ரகங்களை விசைத்தறியில், உற்பத்தி செய்து வருவதை தடுக்க தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தனியாரில் ' ஜிலுஜிலுன்னு ' இருக்கிறது. அதை பார்த்தவுடன் மக்களுக்கு வாங்க வேண்டும் என தோன்றுகிறது. மக்களுக்கு உண்மை எது?  பொய் எது? என தெரியவில்லை. இதனை தடுக்கும் பொருட்டு காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் போலி பட்டு குறித்து விளம்பர பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். அதே போன்று அனைத்து கூட்டுறவு கடைகளிலும், இதுகுறித்து தகவல்கள் இடம்பெறும் என தெரிவித்தார் .

இதையும் படிக்க    | குப்பை வாங்க மறுத்த ஊராட்சி நிர்வாகம்; அலுவலகம் முன்பு குப்பையை கொட்டிய உணவக உரிமையாளர்!