நாளை திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்...!!

நாளை திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்...!!

தமிழ்த் திறையுலகின் முக்கிய சங்கமான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. 

தமிழ் சினிமாவில் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமான சங்கம் என்றால் அது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்தான். தயாரிப்பாளர்களுக்கு என்று இரண்டு மூன்று சங்கங்கள் இருந்தாலும் இந்த சங்கம்தான் அவற்றில் முன்னிலை வகிக்கிறது. இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். தற்போதைய தலைவராக தேனாண்டாள் முரளி உள்ளார்.

இந்த நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற‌ உள்ள இந்த தேர்தலானது, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த தேர்தல் மூலம் ஒரு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், செயலர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர்‌ முரளி ராமசாமியும், மற்றொரு அணியில் மன்னனும் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் இருவரும் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுகின்றனர். நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை வரை நடைபெற உள்ளது. நாளை மாலையே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. 

தேனாண்டாள் முரளி தலைமையிலான தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியில் தலைவராக தேனாண்டாள் முரளி, துணைத் தலைவர்களாக லைகா தமிழ்க்குமரன், அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். செயலாளர் பதவிக்கு ராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசன் போட்டியிடுகின்றனர். பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ் ஜெயின், இணைச் செயலாளர் பதவிக்கு சௌந்தரபாண்டியன் போட்டியிடுகின்றனர்.

மன்னன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் உரிமை காக்கும் அணியில் தலைவராக மன்னனும் துணைத் தலைவர்களாக மைக்கேல் ராயப்பன் மற்றும் விடியல் ராஜூ ஆகியோர் போட்டியிடுகின்றனர். செயலாளர்களாக கமீலா நாசர், தேனப்பன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த அணியில் பொருளாளர் பதவிக்கு ரவீந்தர், இணைச் செயலாளர் பதவிக்கு மணிகண்டன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இது தமிழ்த் திரையுலகில் நடைபெறும் முக்கியமான தேர்தல் என்பதால் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:களத்தில் தாக்குப் பிடிப்பாரா பி.டி.ஆர்...!