படம் பார்த்து முடிந்த அந்த உணர்வு இன்னும் போகவில்லை... நடிகர் கார்த்தி!!

படம் பார்த்து முடிந்த அந்த உணர்வு இன்னும் போகவில்லை... நடிகர் கார்த்தி!!

கால காலத்திற்கு நிற்கின்ற படத்தில் நானும் பணியாற்றி இருப்பது பெருமையாக இருக்கிறது.  படம் பார்த்து முடித்த அந்த உணர்வு இன்னும் போகவில்லை.  அதனால் சரியாக பேசக்கூட முடியவில்லை.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற நாவல் திரைப்படமாக உருவாக்கப்பட்டது.  இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.  படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இந்த ஆண்டு  ஏப்ரல் 28  வெளியாகும் என்று படக் குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

அதன்படி இன்றைய தினம் தமிழ்நாட்டில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்புடன் வெளியானது.  குறிப்பாக சென்னை காசி திரையரங்கம் மற்றும் ரோகிணி திரையரங்கம் ஆகியவற்றில் காலை முதலே ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடத் தொடங்கினர்.  குறிப்பாக ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள காசி திரையரங்கில் நடிகர் கார்த்தி ரசிகர்கள் சார்பாக பெரிய அளவிலான கட்அவுட் வைக்கப்பட்டு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

நான்கு குதிரைகள் சூழ ஜெண்ட மேள வாத்தியங்களுடன் காலை 9 மணிக்கு வெளியான திரைப்படத்தை பார்க்க நடிகர் கார்த்தி வருகை புரிந்தார்.  மேலும் முழு திரைப்படத்தையும் ரசிகர்களுடன் திரையரங்கில் உட்கார்ந்து பார்த்தார் நடிகர் கார்த்தி.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி,

“எல்லோருடனும் அமர்ந்து படத்தைப் பார்த்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது.  காலம் காலத்திற்கு நிற்கின்ற ஒரு படம் அதில் நாமும் பணியாற்றி உள்ளோம் என்பது பெருமையாக இருக்கிறது.  படம் பார்க்க முடிந்த அந்த உணர்வு இன்னும் போகவில்லை அதனால் சரியாக பேசக்கூட முடியவில்லை.” எனக் கூறினார்.

இதையும் படிக்க:  அண்ணாமலையை மீண்டும் சந்தித்தீர்களா...? செய்தியாளர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி!