கமல்ஹாசனை சீண்டிய மாரி செல்வராஜ்...! காரணம் இதுதான்.

கமல்ஹாசனை சீண்டிய மாரி செல்வராஜ்...!  காரணம் இதுதான்.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த ஜூன்  1-ம் தேதி நடந்து முடிந்தது. உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஏ.ஆர்.ரகுமான் போன்றோர் கலந்து கொண்ட இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கமல்ஹாசனும் பங்கேற்றார். 

அப்போது நிகழ்ச்சியின் இறுதியில் மேடையேறிய மாரி செல்வராஜ், மாமன்னன் திரைப்படம் உருவாவதற்கு தேவர்மகன் படமே முக்கிய காரணம். தேவர் மகன் படத்தால் அன்று எனக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டது எனக்  கூறி அரங்கையே அதிர வைத்தார். 

கமல்ஹாசன் முன்பே நேருக்கு நேராய் குற்றம் சாட்டிய மாரிசெல்வராஜூக்கு திரையுலகில் இருந்து எதிர்ப்புகளும் ஆதரவுக்குரலும் அணிவகுத்தன. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பே கமல்ஹாசனின் தேவர்மகன் படம் குறித்து மிக நீண்ட கடிதத்தை அனுப்பி தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர்தான் மாரி செல்வராஜ். 

பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு.. ஒரு சேரிப் பையனின் பகிரங்க கடிதம் என தொடங்கிய மாரி செல்வராஜ், தேவர் மகன் படம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து காட்டமாக எழுதியிருந்தார். 

" போற்றிப் பாடடி பெண்ணே.. தேவர் காலடி மண்ணே ", என்ற ஒற்றைப் பாடல் அந்த காலத்தில் எப்படியெல்லாம் கலவரத்தை தூண்டியது என்பதை அருகில் இருந்து பார்த்தவனுக்குதான் வேதனை புலப்படும் என குறிப்பிட்டவர்,  உத்தரபுரத்தின் சுவர், கொடியன்குளம் கலவரம், தாமிரபரணி சம்பவம் என அனைத்தையும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த நிலையில் மாமன்னன் படத்தை இயக்கி வெளியீட்டுக்கு தயாராய் வைத்திருக்கும் மாரி செல்வராஜ், தேவர்மகன் படத்தை விமர்சித்து புதிய புயலை கிளப்பியுள்ளார். 

எப்பேர்பட்ட பிரபலங்களும் தன்னை அறியாமல் சில தவறுகளை இழைப்பதுண்டு. அப்படியாக கமல்ஹாசனின் தவறை சுட்டிக் காட்டிய மாரி செல்வராஜ், மாற்றங்களை உருவாக்க நினைக்கிறாரா? அல்லது பழங்கதைகளை மீண்டும் தூசு தட்டி வாதங்களை எழுப்ப முடிவெடுத்துள்ளாரா? என்று விவாதித்து வருகின்றனர் சமூகவலைதளவாசிகள்.

இதையும் படிக்க     | "மோடி விமானி இல்லாமல் கூட வெளிநாடு செல்வார் அதானி இல்லாமல் செல்லமாட்டார்" உதயநிதி காட்டம்!