நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ....!

நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு ....!

ஜெய் பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான  ஜெய்பீம் படத்தில், குறவர் சமூகத்தை தவறாக சித்தரிக்கும் நோக்கில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, படத்தை தயாரித்து நடித்த சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குறவர் நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் K.முருகேசன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிசில் புகார் அளித்தார்.  பின்னர், புகார் மீது  நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை ரத்து செய்து, புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி  முருகேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.  அதில்,  நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.ஹேமலதா முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யாவையும், இயக்குனர் ஞானவேலையும்  எதிர்மனுதாரர்களாக இணைக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் வழக்கறிஞர்  அரவிந்த் ஆஜராகி ,
நீதிமன்ற உத்தரவின்படி சூர்யாவையும், ஞானவேலையும் இணைத்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவை எண்ணிடும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 22 -ம் தேதிக்கு தள்ளிவைத்தார். 

இன்னிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,..நடிகர் சூர்யா, இயக்குனர் த. செ.ஞானவேல் ஆகியோர் பதிலளிக்க   உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 

இதையும் படிக்க   | டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனம்; ஆவணத்தை திருப்பிய அனுப்பிய ஆளுநா்...!