பரிதாபங்களுக்கே ஏற்பட்ட பரிதாப நிலை..! ரூ.6கோடி மோசடி செய்ததாக புகார்..!

பண மோசடிக்கு கோபி-சுதாகரின் பதில் என்ன?

பரிதாபங்களுக்கே ஏற்பட்ட பரிதாப நிலை..! ரூ.6கோடி மோசடி செய்ததாக புகார்..!

யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மனதில் இடம் பித்தவர்கள் என்பது ஒரு சிலர் தான். வெள்ளித் திரையிலோ, சின்னத்திரையிலோ அல்லது வேறு விதமாகவோ பிரபலமடையாமல், யூடியூபில் மட்டுமே வித்தியாச வித்தியாசமாக கண்டெண்ட் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்களில் கோபி, சுதாகருக்கு தனி இடம் உண்டு. 

பார்ப்பதற்கு 6 பேக் வைத்து படு ஹேண்ட்சமாகவோ, ஹீரோக்களைப் போலவோ இவர்கள் தென்படுவதில்லை. நமது பக்கத்து வீட்டு பையன்கள் போல, தினசரி அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சிறு, சிறு விஷயங்களை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவிட்டு பல வருடங்களாக தங்களுக்காக அங்கீகாரத்தை தேடி வந்தவர்கள். மெட்ராஸ் சென்ட்ரல் என்ற யூடியூப் சேனல் மூலம் பல வீடியோக்களை வெளியிட்டு வந்தவர்கள், பின்னாளில் பரிதாபங்கள் என தனி சேனலை உருவாக்கி வீடியோக்களை வெளியிட துவங்கினர். 

அதனை தொடர்ந்து வெள்ளித்திரையில் மின்ன வேண்டும் என எண்ணிய கோபியும், சுதாகரும் க்ரௌட் பண்ட்  எனப்படும், மக்களிடம் இருந்தே பணம் சேர்த்தனர். கிட்டத்தட்ட 25,000 நபர்களிடம் இருந்து ரூ.6கோடி வரை சேர்க்கப்பட்டிருப்பதாக இருவரும் கூட்டாக சேர்ந்து சேனல் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர். மேலும் hey money come today tomorrow go என்றப் பெயரில் திரைப்படத்தை தயாரித்து வருவதாகவும், படத்தின் டைட்டில் வெளியீட்டு விழாவில் திரைப்பிரபல விருந்தினர்களை வரவழைத்து அசத்தினர் கோபியும் சுதாகரும். 

இந்த நிலையில், கடந்த ஒன்றரை வருடங்களாக படம் குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பதாக கோபி-சுதாகர் மீது புகார்கள் எழுந்தன. இதற்கிடையில், அதே யூடியூபில் வீடியோக்கள் வெளியிடும் ஜேசன் சாமுவேல் என்பவர் கோபி-சுதாகர் ஸ்கேம் என்ற பெயரில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலான ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கோபியும், சுதாகரும் பண மோசடியில் ஈடுபட்டிருப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். SUPER BACKER என்ற செயலி மூலம் ரூ.500 செலுத்தினால், நாள்தோறும் 1% வட்டி கிடைக்கும் என பரிதாபங்கள் சேனலில் விளம்பரம் செய்யப்பட்டிருப்பதை ஜேசன் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதேபோல FUNDMELON என்ற மோசடி செயலி மூலம் தான் கோபியும், சுதாகரும் CROWD FUNDING-ல் ஈடுபட்டதாகவும், அதன் மூலம் தான் இருவரும் பண மோசடி செய்ததாகவும் குறிப்பிட்டார் ஜேசன். இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த கோபி-சுதாகர், நாங்கள் செயலிகளுக்கு வெறும் விளம்பரம் மட்டுமே செய்ததாகவும், அதற்கும் தங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என விளக்கம் அளித்தனர். அதேபோல, hey money come today tomorrow go படத்தின் தயாரிப்பு பணி நடைபெற்று வருவதாகவும், கொரோனாவால் தங்களது குழு மிகவும் நெருக்கடிக்கு ஆளானதாகவும், ஆனால் படம் குறித்த அப்டேட்டை, பணம் செலுத்திய 25,000 பேருக்கும் தனிப்பட்ட முறையில் அப்டேட் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். 

நிதியளித்தவர்களுக்கு அளிக்கப்பட்ட அப்டேட் என்னவென்று ஜேசன் தனது வீடியோவில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையில், பரிதாபங்கள் சேனலில் பணியாற்றி வந்த பாலு போஸ் என்பவர், தான் நடித்த அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டிருப்பதாக ட்விட்டரில் வருத்தம் தெரிவித்தார். இவர் பெரும்பாலும் நிதி மோசடி தொடர்பான வீடியோக்களில் நடித்திருந்ததால், அவை நீக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது சரி யார் இந்த ஜேசன், அவருக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி நிச்சயம் நாம் அனைவருக்கும் வந்திருக்கும். கோபி-சுதாகர் போன்றே தனக்கென ஒரு தனி யூடியூப் சேனல் மூலம் மற்றவர்களின் வீடியோவிற்கு தனது தனிப்பட்ட கருத்துகளை கூறி வருபவர் தான் ஜேசன் சாமுவேல். இவர் தற்போது குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள பப்ஜி மதனை அனைவரையும் கவனிக்க வைத்தவரும் இந்த ஜேசன் சாமுவேல் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆக இத்தனை குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள கோபி-சுதாகர் இருவரும் நேரடியாகவே இந்த பிரச்னைக்கு பதில் அளித்தால் மட்டுமே சில மர்மங்கள் விலகும். அவ்வாறு இல்லை எனில், அவர்களும் மோசடியில் சிக்கியுள்ளனரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!