"இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாக கூடாது" நடிகர் விஷால்!!
இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாக கூடாது என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் தனது பிறந்த நாளை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் தொழிளார்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வை விஷால் ரசிகர் மன்ற இளைஞர் அணி நிர்வாகி பூக்கடை கருவாயன் ஒருங்கிணைத்தார்.
நிகழ்வின் தொடக்கமாக விஷால் படம் போட்ட கேக் வெட்டப்பட்டது. பின்பு ஏழை எளிய மக்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள மக்களுக்கு மதிய உணவு கொடுக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த மக்கள் விஷாலை காண்பதற்கும் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் ஆர்வம் காட்டினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
” நான் உங்களால்தான் இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறேன். உழைப்பால் தான் முன்னேற முடியும் என்று ஆழமாக நம்புகிறேன் நீங்கள் அனைவரும் உழைப்பாளிகள்.
எனது பிறந்த நாளை முன்னிட்டு காலை முதல் நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறேன். உங்களோடு பிறந்தநாள் கொண்டாடுவதில் தான் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
வளரும் சமுதாயம் போதை பழக்கத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது. இளைய சமுதாயம் கவனத்துடன் படிக்க வேண்டுமே தவிர போதைப் பழக்கத்திற்கு ஆளாக கூடாது”, என தெரிவித்தார்.
இதையும் படிக்க || ” நான் கதை கேட்டு படத்தில் நடிப்பது இல்லை” - நடிகர் யோகிபாபு