பாலியல் தொல்லையால் தூக்கில் தொங்கிய இளம் பெண்..! உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்..!

குற்றவாளிகளின் பெயரை கடிதத்தில் குறிப்பிட்டிருந்த இளம் பெண்..!

பாலியல் தொல்லையால் தூக்கில் தொங்கிய இளம் பெண்..! உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்..!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கும் பட்டுக்கோட்டை அருகே திட்டக்குடி கிராமத்தை சேர்ந்த தமிழழகிக்கும் கடந்த இரண்டு வருவங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பாலமுருகன் கடந்த ஒரு வருடமாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 

ஆவணம் அருகேயுள்ள குடியிருப்பில் தமிழழகி வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த  3-ம் தேதி காலை தமிழழகி தனது பெற்றோருக்கு போனில் பேசி நலம் விசாரித்த நிலையில், அன்று மாலை வெளிநாட்டில் இருந்து பாலமுருகன் தமிழழகியின் பெற்றோருக்கு போன் செய்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார். 
 
பதறியடித்துக் கொண்டு தமிழழகி வசித்து வந்த வீட்டில் சென்று பார்த்தப் போது இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார் தமிழழகி. மகளின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த செருவாவிடுதி காவல்துறையினர், அவர் வசித்து வந்த வீட்டில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது இறப்பதற்கு முன்பு தமிழழகி எழுதி வைத்த கடிதம் ஒன்றை கைப்பற்றினர் காவல்துறையினர். 

அந்த கடிதத்தில், தமிழழகி தங்கியிருந்த பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் அவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாலும், அதனை பொருத்துக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்துக் கொள்ளவுள்ளதாகவும் எழுதி வைத்திருந்தார். மேலும் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர்களின் பெயர்களையும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். 
காவல்துறையினர் முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மகளின் உடலை பெற மாட்டோம் எனக் கூறி தமிழழகியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட தமிழழகியின் உடல் பேராவூரணி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.