திருமண நிகழ்ச்சியில் கிணற்றின் மேல் தளம் உடைந்து விழுந்து 13 பெண்கள் பலி!!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பெண்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருமண நிகழ்ச்சியில் கிணற்றின் மேல் தளம் உடைந்து விழுந்து 13 பெண்கள் பலி!!

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் நிபுவா நவ்ரங்யா என்ற கிராமத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமான விருந்தினர்கள் பங்கேற்றனர். திருமண முடிந்த கையோடு, இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி  நடைபெற்றது.

அப்போது  வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்கள் வீட்டிற்கு பின்னால் அமைந்திருந்த கிணற்றின் மேல் ஏறி நின்றவாறு பேசிக்கொண்டிருந்தனர். ஏனென்றால், கிணற்றீன் மேல் பகுதி இரும்பால் அமைக்கப்பட்டிருந்ததால், வலிமையாக இருக்கும் என்று நினைத்து 20 க்கும் அதிகமான பெண்கள் அதன் மீது ஏறி பேசிக்கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் பாரம் தாங்காத கிணற்றின், மேல் தளம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் மேல் தளத்தில் நின்றுகொண்டிருந்த பெண்கள் அனைவரும் ஆழமான கிணற்றுக்குள் விழுந்து விட்டனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் விழுந்த பெண்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 13 பெண்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த 15 க்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகளை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.