2 முறை கருக்கலைப்பு...கணவர் வெளியே சென்ற நேரத்தில்... மாமியார் உடையில் தீ வைத்து கொலை செய்த மருமகள்

மாமியாரை குத்தி கொலை செய்துவிட்டு கியாஸ் கசிந்து தீ விபத்தில் இறந்ததாக நாடகமாடிய மருமகளின் வெறிச்செயல் திருச்சியில் அரங்கேறியுள்ளது.

2 முறை கருக்கலைப்பு...கணவர் வெளியே சென்ற நேரத்தில்... மாமியார் உடையில் தீ வைத்து கொலை செய்த மருமகள்

திருச்சி தாராநல்லூர் விஸ்வாஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் இப்ராம்கான், நவீன் தம்பதி. இவர்களுக்கு ஆசிம்கான் என்ற மகன் உள்ளான். விருதாசலத்தில் அரிசி ஆலை நடத்தி இவர் சென்னையில் கல்லூரியில் படித்தபோது, ரேஷ்மா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் ஒரு மகன் உள்ளான். ஆனால், ரேஷ்மா குடும்பத்தினர் ஆசிம்கானைவிட வசதியில் சற்று குறைவானவர்கள். இதனால் மாமியார் நவீனுக்கு தனது மகன் ஆசிம்கான் ரேஷ்மாவை திருமணம் செய்து கொண்டதில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக மாமியார் நவீன், மருமகள் ரேஷ்மாவுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் ரேஷ்மா மனக்குமுறலில் தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஆசிம்கான் தனது மனைவி ரேஷ்மாவை விஸ்வாஸ் நகரில் தங்க வைத்துவிட்டு அடிக்கடி விருதாசலம் சென்று அரிசி ஆலையை கவனித்து வருவது வழக்கம். அப்படி சம்பவத்தன்று மாலை ஆசிம்கான் ஒரு நிகழ்சிக்காக வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டில் மாமியாரும் மருமகளும் தனியாக இருந்துள்ளனர். அப்போது மாமியார் நவீன் வீட்டில் மீன் சமைத்து கொண்டு இருக்கும்போது அவர் திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த மாமியார் நவீன், உடனே தன்னை தூக்கிவிடும்படி ரேஷ்மாவிடம் கூறியுள்ளார். ஆனால் மாமியார் மீது ஆத்திரத்தில் இருந்த ரேஷ்மா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை எழுந்திருக்க விடாமல் அருகே இருந்த சிறிய கத்தியால் சரமாரியாக அவரை குத்தியுள்ளார். 

இதனைத்தொடர்ந்து கத்தி குத்தியதில் பலத்த காயமடைந்த மாமியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே ரேஷ்மா மாமியார் உடையில் தீ வைத்து அவரது உடலை எரித்துவிட்டார். இதனையடுத்து நிகழ்ச்சிக்கு சென்று இருந்த ஆசிம்கான் வீடு திரும்பிய போது தாயார் உடல் கருகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டு நவீன் உடல் கருகி இறந்ததாக கூறி ரேஷ்மா கண்ணீர்விட்டு அழுது நாடகமாடியுள்ளார். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கையில் நவீனின் உடலில் 14 இடங்களில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட காயங்கள் இருந்ததை முக்கிய ஆதாரங்களாக கொண்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மருமகள் மீது சந்தேகம் அடைந்த போலீசார்  ரேஷ்மாவை பிடித்து துருவி, துருவி விசாரித்தனர். 

விசாரணையின் போது, நான் எனது கணவர் ஆசிம்கானுடன் சேர்ந்து வாழ்ந்தது மாமியார் நவீனுக்கு பிடிக்கவில்லை. இதனால் தினமும் என்னை சித்ரவதை செய்து வந்தார். ஏற்கனவே 2 முறை கருக்கலைப்பு செய்தநிலையில், 3-வது முறையாக ஒரு பிள்ளையை பெற்று எடுக்க மிகவும் சிரமப்பட்டேன். சம்பவம் நடந்த அன்று சமையல் அறையில் இருந்த எனது மாமியார் திடீரென தவறி கீழே விழுந்தார். அப்போது அவர் என்னிடம் தூக்கிவிடும்படி கேட்டார். ஆனால், அவர் மீது இருந்த ஆத்திரத்தில் நான் அவரிடம் அப்படியே இறந்துவிடுங்கள் என்று கூறினேன். இதை கேட்டு அவர் சத்தம் போட்டார். உடனே நான் அருகே இருந்த சிறிய கத்தியை எடுத்து அவரை பலமுறை குத்தி கொலை செய்துவிட்டு, அவரது உடலை எரித்தேன். பின்னர் கியாஸ் கசிந்து தீ விபத்தில் அவர் இறந்ததாக நாடகமாடினேன் என்று வாக்குமூலம் கூறியுள்ளார்.

இதனையடுத்து போலீசார் மாமியாரை கத்தியால் குத்தி உடலை எரித்து கொலை செய்த மருமகள் ரேஷ்மாவை கைது செய்தனர்.