தவறான உறவில் பேத்திக்கு பிறந்த ஆண் சிசுவை கொன்று கிணற்றில் வீசிய பாட்டி...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தவறான உறவில் பிறந்த ஆண் சிசுவை தாயும் பாட்டியும் சேர்ந்து கொலை செய்து விவசாய கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கம் அடுத்த ஆலப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள். மூதாட்டியான இவரது மகன் மற்றும் மருமகள் இறந்த நிலையில், பேத்தி பவானியை வளர்த்து வந்துள்ளார். பவானிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து வந்து பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கு அதே பகுதியை சேர்ந்த பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் கடந்த 26ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தவறான உறவில் பிறந்த ஆண் குழந்தையை, இருவரும் சேர்ந்து கொலை செய்து அருகேயுள்ள விவசாய கிணற்றில் வீசியுள்ளனர்.
சிசுவை போலீசார் மீட்ட நிலையில் கோவிந்தம்மாள் மீண்டும் குழந்தையை வாங்கி சென்று அடக்கம் செய்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.