அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் பறிமுதல்!

சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் தசரா பண்டிக்கை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சொந்த ஊர் செல்வதற்கு, பெரும்பாலான மக்கள் வழக்கம் போல், பேருந்து சேவையை நாடினர். இதன் காரணமாக ஆம்னி பேருந்துகளில் அதிகமான கட்டணங்கள் வசூலிப்பதாக போக்குவரத்து துறைக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து போக்குவரத்து கமிஷனர் சண்முக சுந்தரம், இணை கமிஷனர் முத்து ஆகியோர் உத்தரவின் பேரில் மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கத்திப்பாரா, மீனம்பாக்கம், பரனூர் ஆகிய இடங்களில் கோவை, மதுரை திருச்சி, நெல்லை, கன்னியாகுமாரி ஆகிய பகுதிகளுக்கு கிளம்பிய ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்தனர். அப்போது கோவைக்கு ரூ. 2950, மதுரைக்கு ரூ. 1700, திருச்சிக்கு ரூ. 1100 கன்னியாகுமரிக்கு ரூ. 2400, நெல்லைக்கு ரூ. 2100 என கட்டணம் வசூலிக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். 

சாதாரண நாட்களை விட 2 மடங்கு அதிகமான கட்டணங்கள் வசூலித்து அழைத்து வந்ததை விசாரணையில் அதிகாரிகளிடம் பயணிகள் தெரிவித்தனர். 

இதையடுத்து 9 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கூடுதல் கட்டணங்களை வசூலித்த 9 ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.