சினிமாவில் நடிக்க வைக்கிறேன்.. இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சிறுமியை வீட்டுக்கு வர வைத்து அத்துமீறிய ஆசாமி.! 

சினிமாவில் நடிக்க வைக்கிறேன்.. இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சிறுமியை வீட்டுக்கு வர வைத்து அத்துமீறிய ஆசாமி.! 

சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை தியாகராய நகர் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியின் பெற்றோர் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அந்தப் புகாரில் தனது 17 வயது மகள் ஆன்லைன் வகுப்பில் படித்து கொண்டிருந்தபோது இன்ஸ்டாகிராம் என்ற செயலி மூலம் அறிமுகமான சத்யபிரகாஷ் என்பவர் தான் சினிமா துறையில் இயக்குநராக இருந்து வருவதாகவும், தனது 17 வயது மகளை சினிமாவில் நடிகையாக நடிக்க வைக்கின்றேன் எனவும் பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் சத்ய பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தெரிவித்திருந்தனர்.

இந்த புகாரின் பேரில் வடபழனி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட மதுரவாயிலைச் சேர்ந்த சத்யபிரகாஷ்(37) என்பவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரியவந்ததை அடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.