போலி வாடிக்கையாளர்கள் பெயரில் நகைகளை அடகு வைத்து மோசடி  :  மேலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு!!

வேளாங்கண்ணியில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் போலியான வாடிக்கையாளர்கள் பெயரில்  நகைகளை அடகு வைத்ததாக கூறி ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் பண மோசடி, வங்கி மேலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

போலி வாடிக்கையாளர்கள் பெயரில் நகைகளை அடகு வைத்து மோசடி  :  மேலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு!!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் தனியார் நகை அடகு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நாகை மாவட்டம் திருக்குவளை மாவூரைச் சேர்ந்த சத்தியபிரகாஷ் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார்.  இதே நிறுவனத்தில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கிழக்குத் தெருவைச் சேர்ந்த ஜஸ்வர்யா, வேளாங்கண்ணி செபாஸ்டியன் நகரைச் சேர்ந்த ராஜ்குமார், திருப்பூண்டி அக்ரகாரத்தெருவைச் சேர்ந்த சங்கீதா ஆகியோர் வாடிக்கையாளர் சேவை நிர்வாகிகளாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி கிளையில் தணிக்கை நடந்தது. அப்போது பாதுகாப்பு பெட்டக அறையில் இருந்த நகை பாக்கெட்டுகளை காணவில்லை. இது குறித்து தணிக்கை அதிகாரிகள் திருச்சி மண்டல பகுதி மேலாளர் ஜூலியஸ்ஜோபர்ட்அருணிடம் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் ஜூலியஸ்ஜோபர்ட்அருண் நாகை எஸ்பி ஜவஹரிடம் கடந்த 1ம் தேதி புகார் செய்தார். இந்த புகார் மனு நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இது குறித்து இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி முதல் 2021ம் ஆண்டு நவம்பர் வரை கிளை மேலாளர் சத்தியபிரகாஷ் உட்பட 4 பேரும் சேர்ந்து வாடிக்கையாளர் பெயரில் போலியாக ஆவணங்கள் தயார் செய்து பணத்தை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்படி 33 போலியான வாடிக்கையாளர்கள் கணக்கு தொடங்கி 1359 கிராம் போலியான ஆபரணங்கள் அடங்கிய 39 பாக்கெட்டுகள் வைத்துள்ளது மேலும் உறுதிமொழி ஆபரணத்தில் 39.5 கிராம் எடை நகையை 53 கிராமாக உயர்த்தி அடகு வைத்து வாடிக்கையாளருக்கு கொடுத்த பணம் போக மீதமுள்ள பணத்தை கையாடல் செய்தது.

பாதுகாப்பு அறையில் உள்ள பணப்பெட்டியில் இருந்து ரூ.15 லட்சத்து 76 ஆயிரத்து 65 முறைகேடாக பயன்படுத்தியது என மொத்தமாக ரூ-.1 கோடியே 16 லட்சத்து 38 ஆயிரத்து 80 கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கிளை மேலாளர் சத்தியபிரகாஷ், ஜஸ்வர்யா, ராஜ்குமார், சங்கீதா ஆகிய 4 பேர் மீது  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.