பட்டா மாற்றம் செய்ய 5000 லஞ்சம்... கையும் களவுமாக மாட்டிய கிராம நிர்வாக அலுவலர்...
கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் திருமால். இவர் கிராம நிர்வாக திருவள்ளூர் மாவட்ட சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் தனது தந்தை ஏழுமலை பெயரில் உள்ள சொத்தின் பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்வதற்காக திருப்பாச்சூர் கிராம நிர்வாக அலுவலர் திருமாலை அணுகியபோது, பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதனையடுத்து சிலம்பரசன் லஞ்ச ஒழிப்பு துறையினரை அணுகி இதுகுறித்து தகவல் தெரிவித்ததையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் ஆலோசனையின் பெயரில் ரசாயனம் தடவிய ரூபாய் நொட்டுகளை சிலம்பரசனிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர், கிராம நிர்வாக அலுவலர் திருமாலிடம் ரூபாய் 5000 கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் திருமாலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.