திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... வரதட்சணை கொடுமையால் விபரீத முடிவு
சென்னை பனையூர் அருகே வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரமோத் - சினேகா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆன நிலையில், பிரமோத் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2 வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையில், கோபித்துக் கொண்ட மனைவி சினேகா, சேலையூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனிடையே, நேற்றிரவு சினேகாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அவரது கணவர் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த சினேகா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், வரதட்சணை கொடுமை காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக சினேகாவின் தந்தை புகார் அளித்த நிலையில், கணவர் பிரமோத்தை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.