செங்கல்பட்டு: பாமக நகர செயலாளர் இறப்பு; குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்!

செங்கல்பட்டு: பாமக நகர செயலாளர் இறப்பு; குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்!

பாமக நகர செயலாளர் கொலை குற்றவாளியை கைது செய்ய முயன்ற போது, காவல்துறையை தாக்கிய விஜய் என்ற நபரை  சுட்டு பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் , செங்கல்பட்டு நகரில்,  மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தவர்  பாமக வடக்கு நகர செயலாளர்  நாகராஜ். இவர் நேற்று இரவு 11மணியளவில்  மர்ம நபர்களால் வெட்டி சம்பவ இடத்திலேயே படுகொடுலை செய்யப்பட்டார்.

படுகொலை சம்பவம் குறித்து தகவல் தெரிந்த செங்கல்பட்டு நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர்.

இந் நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக இச்சம்பவம் குறித்து தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையின் போது, கொலை குற்றவாளிகள் பரனூர் வழியாக  சென்றதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

 அப்போது புலிபாக்கம் பகுதியில் ரயில்வேபாதை அருகே சந்தேக நபர் செல்வதாக அறிந்து காவல்துறை அந்த நபரை கைது செய்ய முயன்ற போது காவல்துறையை தாக்க முயற்சித்த செங்கல்பட்டு,  சின்னநத்தம் பகுதியை சேர்ந்த அஜய் என்கிற நபரை காவல் துறையினர் துப்பாக்கியால் இடது கால் பகுதியில் சுட்டனர்.

இதனால்  நிலை தடுமாறிய அஜயை காவல்துறையினர் கைது செய்து சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எக்ஸ்ரே அறிக்கையில் பலத்த காயமில்லை என அறிய வந்ததால், காவல்துறையிளர் அவரை உள்நோயாளியாக அனுமதித்து காவல்துறையின் பலத்த காவல் பாதுகாப்புடன் வைத்துள்ளனர்.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் தலைமையில், ஆய்வாளர்கள் வெற்றிச்செல்வன், சத்தியவாணி ஆகியோர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு குற்றவாளி செங்கல்பட்டு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு மண்டல காவல்துறை துணை தலைவர் பகலவன் மற்றும் செங்கல்பட்டு எஸ் பி உள்ளிட்டோர் கொலை சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டு, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்த சம்பவம் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:அம்பேத்கர் ஆதரித்த பொது சிவில் சட்டம் எப்படிபட்டது? திருமாவளவன் விளக்கம்!