5 கிலோ எடை கொண்ட திமிங்கல வாந்தியை விற்க முயற்சி... 5 பேர் கொண்ட கும்பல் கைது...

கன்னியாகுமரியில் 5 கிலோ எடை கொண்ட திமிங்கல வாந்தியை, பல கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

5 கிலோ எடை கொண்ட திமிங்கல வாந்தியை விற்க முயற்சி... 5 பேர் கொண்ட கும்பல் கைது...

கன்னியாகுமரி மாவட்டம் சுங்காங்கைடை பகுதியில் நேற்று மாலை சொகுசு காரில் வந்த கும்பல் ஒன்று அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டருகே நின்று கொண்டு தடை செய்யப்பட்ட பல கோடி மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்ய பேரம் பேசி வருவதாக இரணியல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த சொகுசு காரை சுற்றி வளைத்து அந்த காரில் இருந்த 5-நபர்களையும் அவர்கள் காரில் பதுக்கி வைத்திருந்த பொருளையும் மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சொகுசு காரில் வந்தது சென்னை செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த வரதராஜன்(40). என்பதும் அவர் 5-கிலோ எடையுள்ள பல கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் வாந்தி (ஆம்பர் கிரீஸ்) எனப்படும் பொருளை சென்னையில் ஒரு நபரிடம் இருந்து சில லட்சம் முன்பணம் கொடுத்து வாங்கி தனது கூட்டாளிகளான  தென்காசி பகுதியை சேர்ந்த சுப்ரமணியன்(45), ராமநாடு பகுதியை சேர்ந்த முகமது சுல்தான்(52), கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்த சில்வஸ்டார்(47), வெர்ஜில்(47) ஆகியோருடன் கூட்டு சேர்ந்து சுங்காங்கடை இந்திராகாலணி பகுதியை சேர்ந்த தனபாலன். , ரூத், தம்பதியருக்கு 5-கோடி ரூபாய்க்கு விற்க திட்டமிட்டு சுங்காங்கடை பகுதியில் அவர்கள் வீட்டருகே காரில் 5-கிலோ ஆம்பர் கிரீஸ் உடன் வந்து நின்று அந்த தம்பதியருடன் பேரம் பேசி வந்ததாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தியும் இரணியல் போலீசாருக்கு அந்த ஆம்பர் கிரீஸ் உண்மை தன்மை தெரியவராத நிலையில் குழப்பமடைந்த அவர்கள் கைப்பற்றிய 5-கிலோ ஆம்பர் கிரீஸ் மற்றும் 5-நபர்களையும் வேளிமலை வனச்சரக அதிகாரி மணிமாறன் இடம் ஒப்படைத்ததோடு சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

அதோடு ஆம்பர் கிரீஸ் ஐ வாங்க பேரம் பேசி போலீசாரை கண்டு தப்பியோடிய தனபாலன்-ரூத் தம்பதியரையும் போலீசார் தேடி வருகின்றனர் தொடர்ந்து மாவட்ட வனத்துறை அதிகாரி மற்றும் வேளிமலை வனச்சரக  அதிகாரி மணிமாறன் அந்த 5-நபர்களிடமும் விசாரணை நடத்தியதோடு அவர்கள் மீது வனத்துறையால் தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் எனும் திமிங்கல வாந்தியை கள்ள சந்தையில் விற்பனை செய்ய முற்பட்டதாக அவர்கள் 5-பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ததோடு ஆம்பர் கிரீஸ் ன் உண்மை தன்மை குறித்து அறிய ஆய்வக பரிசோதனைக்கும் அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர் 

இந்த நிலையில் சர்வதேச சந்தையில் பல கோடி மதிப்பில் விற்பனை ஆகும் திமிங்கவத்தின் வாந்தி எனப்படும் ஆம்பர் கிரீஸ் கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் முறையாக பிடிப்பட்ட நிலையில் இதுகுறித்தும் அதன் உண்மை தன்மை குறித்தும் காவல் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும் சரியான புரிதல் இல்லாத நிலையில் போலியாக புதிய மோசடியை இந்த கும்பல் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.