நவம்பர் 1-ல் இருந்த தமிழ்நாடு நாள் எப்படி ஜூலை 18 ஆக மாறியது..!

நவம்பர் 1-ல் இருந்த தமிழ்நாடு நாள் எப்படி ஜூலை 18 ஆக மாறியது..!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு திருநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

தமிழ்நாடு நாள் என்றால் என்ன:
தமிழருக்கென்று தனித்தாயகம் அல்லது மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் நாள் தான் தமிழ்நாடு நாளாகும். ஆனால் தமிழ்நாடு என்பது முதலில் சென்னை மாநிலமாக தான் இருந்தது.

முதலில் சென்னை மாநிலம்:

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா மொழி வாரியாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஆந்திர மக்களிடையே வலுத்து வந்தது. ஆனால்  ஒன்றிய அரசு அதனை ஏற்க முதலில் மறுத்ததால் கலவரங்கள் வெடித்தன. இதனால் ஒன்றிய அரசு வேறுவழியின்றி 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தது. அதன்படி தமிழருக்கென்று ஒரு மாநிலமாக சென்னை மாநிலம் அறியப்பட்டது.

சென்னை மாநிலம் எப்படி தமிழ்நாடு ஆனது:

முதன்முதலில் சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என மாற்றக்கோரி சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிரிழந்தார். அதன்பின் சென்னை மாநிலத்தில் திமுக ஆட்சிக்கு வந்து முதலமைச்சராக அறிஞர் அண்ணா பொறுப்பேற்றபிறகு,  1968 ஆம் ஆண்டு ஜூலை  18 ஆம் தேதி சென்னை மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு எனப்பெயர் மாற்ற சென்னை மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். இருப்பினும்  இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14 தைப் பொங்கலன்று தான் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது.

தமிழ்நாடு நாளாக முதலில் அறிவிக்கப்பட்ட நாள் எது:

மொழிவழியாக பிரிக்கப்பட்ட மாநிலங்களில் மாநிலம் உருவான நாளை அந்தந்த மாநிலங்கள் அரசு விழாவாகவும், அரசு விடுமுறை நாளாகவும் அறிவித்து கொண்டாடி வருகின்றன. ஆனால் தமிழ் நாட்டில் அப்படியான விழாவானது அரசு சார்பில் கொண்டாடப்படாமலேயே இருந்து வந்தது. ஒருகட்டத்தில் தமிழ்நாடு நாள் அமைந்த நவம்பர் 1 ஆம் நாளை சிறப்பாக கொண்டாடவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. அதன்படி நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு  2019 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதியன்று வெளியிட்டது.

நவம்பர் 1 ஆம் தேதி இருந்த தமிழ்நாடு நாள், ஜூலை 18 ஆனது எப்படி:

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கான அரசாணையை ஒன்றிய அரசு வெளியிட்டது. ஆனால்  கடந்த 2021 ஆம் ஆண்டு  முதல்முறையாக முதலமைச்சராக  பொறுப்பேற்ற  மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு, அன்றைய நாளான ஜூலை 18 அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவித்து அரசாணை வெளியிட்டது.

சர்ச்சையானது தமிழ்நாடு நாள் ஜூலை 18 :

நவம்பர் முதல் நாளை மாற்றி ஜூலை 18 அன்று தான் தமிழ்நாடு நாள் என மு.க.ஸ்டாலின் அறிவித்ததற்கு பல்வேறு தரப்பினரும், கட்சித்தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  தாங்கள் வழக்கம்போல நவம்பர் முதல் நாளன்று தமிழ்நாடு விழாவைக் கொண்டாடப்போவதாக பல தலைவர்கள் தெரிவித்தனர்.  முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரையின் படி பார்த்தாலும் புதிய மாநிலம் பிறந்தநாளையோ அல்லது அதற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாளையோ, கொண்டாடலாம். அதை விட்டுவிட்டு இரண்டுக்கும் நடுவே சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நாளை எப்படி ஒரு மாநிலம் பிறந்த நாளாக கொண்டாட முடியும் என சர்ச்சைகள் எழுந்தன.  
.
தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப்பட்டது :

கடந்த 2021 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் அறிவித்தது போன்றே, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு திருநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பங்கேற்று சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் துரை முருகன், தங்கம் தென்னரசு, எம். பி. சாமிநாதன், தமிழ் வளர்ச்சி துறை செயலாளர் மகேசன் காசிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேருரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால் இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படாமலேயே போயிருக்கும் என பெருமிதம் தெரிவித்தார்.

நவம்பர் முதல் நாளா அல்லது ஜூலை 18ஆம் தேதியா:

தமிழ்நாடு நாள் என்பது நவம்பர் முதல் நாளா அல்லது ஜூலை 18ஆம் தேதியா என்று இதுநாள் வரை சர்ச்சை எழுந்து வந்த நிலையில், இன்று ஜூலை 18 ஆம் தேதி தமிழக அரசு தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.