பல்கலைக்கழகமாய் வாழ்ந்திட்ட இனமானப் பேராசிரியர்..!
நான் தமிழ் பற்றுள்ள மாணவன், தமிழனாக உணர்வு பெற்ற மாணவன் என்ற நன்மதிப்பை பெறுவதற்கு காரணம் தந்தை பெரியாரும் அவர் ஊட்டிய தன்மான உணர்வும் தான் - க. அன்பழகன்
பேராசிரியர் என்றால் அது...
தமிழ்நாடு அரசியலிலே பொதுப்படையான விமர்சங்களுக்கு ஆளாகாத ஒரு தலைவர் உண்டெனில், அவர் அன்பழகனாக தான் இருக்க முடியும். இதற்கு காரணம் அவர் கொள்கை ரீதியான எதிர்வினைகளை ஆற்றுவாரே தவிர, எந்தவொரு தனி மனிதன் மீதும் விமர்சனங்கள் ஏதும் வைத்ததில்லை.
பெரியார் என்றால் தந்தை பெரியாரையும், பேரறிஞர் என்றால் அண்ணாவையும், கலைஞர் என்றால் கருணாநிதியையும் மட்டுமே குறிப்பதைப் போல, தமிழ்நாட்டில் பேராசிரியர் என்றால் அது அன்பழகனை மட்டுமே குறிக்கும்.
தேசியத்தில் பிறந்து திராவிடத்தை வளர்த்தவர்
கல்யாணசுந்தரம் - சொர்ணம் அம்மையார் தம்பதியருக்கு 1922, டிசம்பர் 19ஆம் நாள் அன்பழகன் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் இராமையா, பின்னாளில் தமிழ் மீது கொண்ட பற்றால் தனது பெயரை அன்பழகன் என்று மாற்றிக்கொண்டார்.
தேசிய இயக்கத்தின் மீது மிகுந்த ஈடுபாடுக் கொண்டிருந்த அன்பழகனின் தந்தை கல்யாணசுந்தரம், டாக்டர் வரதராஜலு, தந்தை பெரியார், திரு.வி.க, ஆகியோர் மீது மிகுந்த மதிப்பு கொண்டவராக இருந்தார். பெரியார் காங்கிரசில் இருந்தபோது கதர் இயக்கத்தை பரப்புவதற்காக தமிழ்நாட்டில் ஊர் ஊராக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட காலத்தில், மயிலாடுதுறை பகுதியில் கல்யாணசுந்தரனார் கதர் இயக்கத்தை பரப்பி வந்தார்.
1925இல் காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பார்ப்பனர் அல்லாதவருக்கான இடஒதுக்கீடு தீர்மானத்தை திரு வி.க ஏற்காததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசை விட்டு வெளியேறினார் தந்தை பெரியார். அப்போது அவருடன் வெளியேறியவர்களில் அன்பழகனின் தந்தை கல்யாணசுந்தரமும் ஒருவர்.
கல்வியும் பேராசிரியர் பணியும்
மயிலாடுதுறை, திருவாரூர், குத்தாலம் ஆகிய ஊர்களில் ராமையா என்ற பெயருடன் உயர்நிலை பள்ளிக்கல்வியை நிறைவு செய்த அன்பழகன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹானர்ஸ் முடித்த கையோடு தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியை தொடங்கினார்.
தாடியில்லா பெரியாரைக் கண்டவர்
பொதுவாக பெரியார் என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது அவரது நரைத்த தாடியும் கைத்தடியும் தான் ஆனால் தாடி இல்லாத பெரியாரையே பார்த்தவர் தான் சிறுவன் ராமையா. சிறு வயது தொட்டே ராமையா தனது தந்தை கல்யாண சுந்தரத்துடன் பெரியார் பேசும் கூட்டங்களுக்கு சென்று வந்தார். சிறுவனாய் இருந்த போதிலிருந்தே பெரியாரின் பேச்சைக் கேட்டு வளர்ந்த அன்பழகன் தான் இதுவரையிலும் பேசிய கூட்டங்களில் எல்லாம் பெரியாரின் கொள்கைகளை எடுத்துரைக்காமல் இருந்ததில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.
பெரியாரைப் பற்றி பேராசிரியர்
தான் மாணவனாக இருந்த போதே என்னுடைய உள்ளத்தில் ஆழமாக பதியுமாறு உணர்வுகளை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். நான் தமிழ் பற்றுள்ள மாணவன், தமிழனாக உணர்வு பெற்ற மாணவன் என்ற நன்மதிப்பை பெறுவதற்கு காரணம் தந்தை பெரியாரும் அவர் ஊட்டிய தன்மான உணர்வும், பகுத்தறிவு சிந்தனையும் தான்.
அந்த உணர்வுகளில் ஏற்பட்ட பற்றினால் என்னை நான் ஓரளவுக்கு அதில் ஈடுபடுத்திக் கொண்டேன். அந்த முறையில் பெரியாருடைய கொள்கை, பெரியாருடைய சிந்தனை மக்களிடத்திலே இடம்பெற்றாக வேண்டும் என்று விரும்புகிறவனாகவே நான் இருக்கிறேன்.
பேராசிரியர் பட்டமளித்த பேரறிஞர்
மறைந்த திமுக தலைவர் பேரறிஞர் அண்ணாவிற்கு கலைஞர் எப்படி ஒரு தம்பியோ, அதேபோல பேராசிரியர் அன்பழகனும் அண்ணாவின் பாசத்திற்குரிய தம்பி ஆவார். பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக அன்பழகன் பணிபுரிந்த காலங்களில் அண்ணாவை சந்திக்க வருவார் அப்போது அன்பழகனை கண்டதும் "வாப்பா பேராசிரியர் தம்பி" என்று அண்ணா அன்போடு அழைத்தது மட்டுமல்லாமல் சுற்றி இருப்பவர்களிடமும் அவ்வாறே அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
அண்ணா அன்று பேராசிரியர் என்று அன்போடு அழைத்ததாலும், அதனைத் தொடர்ந்து கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்ததாலும், மேலும் யாருக்காகவும் எதற்காகவும் தனது சுயமரியாதையை சற்றும் விட்டுக் கொடுக்காத தன்மையால் பின்னானில் "இனமான பேராசிரியர் அன்பழகன்" என்று அழைக்கப்பட்டார்.
தன்னை குறித்து அன்பழகன்
முதல் நிலையில் நான் ஒரு மனிதன், ஆண்மகன், அடுத்து நான் அன்பழகன், அதற்குப் பின் நான் ஒரு பகுத்தறிவாளன் பெரியாரின் தொண்டன், நான்காவதாய் நான் அண்ணாவின் தம்பி, ஐந்தாம் நிலையில் நான் கலைஞரின் நண்பன் இந்த வரிசை முறை எப்பொழுதும் என்னுடன் இருக்கும். மரணம் தான் அதனை அழிக்கக்கூடும், அழிக்க முடியும். இவ்வாறு தன்னைப் பற்றி கூறியவர் அன்பழகன்.
சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் துறைப் பேராசிரியராக பணியாற்றிய போது அண்ணாவின் அறிவுறுத்தலின் பேரில் முதன் முதலில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார் அன்பழகன். அப்போது பச்சையப்பன் அறக்கட்டளை தலைவராக இருந்த ராஜகிருஷ்ண பிள்ளை காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கு எதிராக சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தனது முதல் வெற்றியை பதிவு செய்தார் அன்பழகன்.
(1957-1962) - எழும்பூர் சட்டப்பேரவை
(1962-1967) - சென்னை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தொகுதி சட்டமன்ற மேலவை
(1967-1971) - திருச்செங்கோடு நாடாளுமன்ற உறுப்பினர்
(1971-1976) - சென்னை புரசைவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்
(1977-1980) - சென்னை புரசைவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்
(1980-1984) - சென்னை புரசைவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்
(1984-1989) - சென்னை பூங்கா நகர் சட்டப்பேரவை உறுப்பினர்
(1989-1991) - சென்னை அண்ணாநகர் சட்டப்பேரவை உறுப்பினர் (ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடந்தது)
1991 - சென்னை சேப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பு இழப்பு
(1996-2001) - சென்னை துறைமுகம் சட்டப்பேரவை உறுப்பினர்
(2001-2006) - சென்னை துறைமுகம் சட்டப்பேரவை உறுப்பினர்
(2006-2011) - சென்னை துறைமுகம் சட்டப்பேரவை உறுப்பினர்
2011- சென்னை வில்லிவாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பு இழப்பு
அன்பழகன் குறித்து கருணாநிதி
தி.மு.க, திராவிட இயக்கக் கொள்கைகளைப் பற்றி பேசுவதை விட்டு, அப்போதைய அரசியல் சூழல்களைப் பற்றி மட்டும் பேசி, அதன் போக்கிலேயே கட்சி வளைந்தபோதெல்லாம் கட்சியை கொள்கையின் பக்கம் திருப்பி, இப்போதும் எங்களுக்கெல்லாம் ஒரு ஆசிரியராகச் செயல்படுவர் அன்பழகன். நாங்கள் உங்களுக்காகப் பேசுகிறோம்; பேராசிரியர் எங்களுக்காகப் பேசுகிறார். அதன் அர்த்தம் என்னவென்றால்? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் எங்கள் உரையில் இருக்கும்; நாங்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பேராசிரியரின் உரையில் இருக்கும்.
கருணாநிதி குறித்து அன்பழகன்
கலைஞர் அவர்கள் அரசியலில் வெற்றி பெறலாம், வெற்றி பெறாமல் போகலாம், முதலமைச்சராக இருக்கலாம், இல்லாமல் போகலாம், ஒருவேளை ஒரு கட்சித் தலைவர் என்ற பதவியிலே இருக்கலாம், அந்த பதவியை கூட விட்டு விடலாம் ஆனால் தமிழினத்தின் தலைவர் என்ற அந்த பதவியை என்றைக்கும் அவர் விட முடியாது. அந்த மிகப்பெரிய பொறுப்பு கலைஞர் இடத்திலே இருக்கிறது.
திருமூலர் அவருடைய பாடலிலே;
"என்னை நன்றாய் இறைவன் படைத்தனை
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே" - என்று பாடுவார், அந்த நாளிலேயே அத்தகைய உணர்வு.
இன்றைக்கு கலைஞர் இந்த சமுதாயத்தை நன்றாக ஆக்குவதற்காக தமிழ் அவரை படைத்திருக்கிறது என்று மனதார கருதுகிறேன். அதிலே அவர் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவராக, அவர் ஏற்று இருக்கிற பதவிகளுக்கு அப்பாற்பட்டவராக, அவர் தலைமை தாங்குகிற கட்சிக்கு அப்பாற்பட்டவராக, அவரை அறிந்தவர்கள் அறியாதவர்கள் அனைவருக்கும் வழிகாட்டுகிற ஒருவராக இருக்கிறார். நான் பெருமைக்காக சொல்லவில்லை "வள்ளுவன் காட்டிய வழியை நிலைநாட்டுகிற தகுதியும் அவருக்கு உண்டு".
மு.க.ஸ்டாலினை பற்றி அன்பழகன்
மாணவப் பருவத்திலேயே தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கப் பகுத்தறிவு கொள்கையில் ஊறித் திளைத்து, கல்லூரி மாணவராக பயின்ற நாட்களில் பேரறிஞர் அண்ணாவின் எழுத்தில் வடிக்கப்பட்ட சிந்தனை தேறலையும், முத்தமிழறிஞர் கலைஞரின் பலவகை எழுத்துச் சித்திரங்களையும், நாடக உரையாடல்களையும் தேர்ந்தும் தெளிந்தும் திராவிட இயக்கத்தில் முழுமையாகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் மு.க ஸ்டாலின்.
இதையும் படிக்க | “எல்லார்க்கும் எல்லாம்” - அறிக்கை வெளியிட்டு நூற்றாண்டு வளைவை திறந்து வைத்த முதலமைச்சர்!
மாணவராக இருந்த போதே அறிஞர் அண்ணா அவர்களை அழைத்து மாணவர்களைக் கொண்ட அமைப்பைத் துவக்கி வைத்துத் தரும்படி கேட்டவர் ஸ்டாலின். தான் உருவாக்கிய மாணவர் அமைப்பில் உரையாற்றியே சொற்பொழிவு ஆற்றலை வளர்த்துக் கொண்டவர் அவர். தந்தை பெரியாரின் திராவிட இயக்கப் பாசறையில் கலைஞரும், நானும் மற்றும் பலர் இளைஞர்களாக இருந்த நாட்களிலேயே பயிற்சி பெற்றதைப் போன்று அண்ணாவின் இலட்சியப் பாதையில் நடை போடுவதற்கான பயிற்சியை கலைஞர் பாசறையில் பெற்றவர் தம்பி மு.க ஸ்டாலின்.
கலைஞரின் ஏங்கல்ஸ் பேராசிரியர்
திராவிட இயக்கத்தின் நோக்கத்தை, அதன் லட்சியத்தை, அந்த லட்சியத்தை அடைவதற்குத் தேர்ந்தெடுத்த பாதையை, அந்தப் பாதையில் எதிர்கொண்ட போராட்டங்களை, உன்னத உயிர்களின் தியாகங்களை, ஜனநாயக முறையில் மக்களின் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பேற்றதை, ஆட்சிக் காலங்களில் நிறைவேற்றிய கொள்கை வழிச் சாதனைகளை, திராவிட இயக்கம் ஏற்படுத்திய சமுதாய மறுமலர்ச்சியை, உரிமைகளை மீட்டெடுத்த அமைதிப் புரட்சியை, ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு காலம் மக்களிடம் எடுத்துரைத்த கருத்தியல் பல்கலைக்கழகமாக விளங்கியவர் இனமான பேராசிரியர்.
நூற்றாண்டு கடந்த திராவிட இயக்கத்தில் முக்கால் நூற்றாண்டுக் காலம் பொதுப் பணியாற்றிய பெருமைக்குரியவர்கள் முத்தமிழறிஞர் கலைஞரும், இனமான பேராசிரியரும் தான். வேறு எந்த இயக்கத்திலும் இத்தகைய வாய்ப்பைப் பெற்றவர்கள் கிடையாது. கொள்கை உறுதியோடு இருவரும் பயணித்ததால் தான் தலைமுறை கடந்தும் வளர்ந்தோங்கிக் கொண்டே இருக்கிறது திராவிட முன்னேற்ற கழகம்.
பொதுவுடைமைக் கொள்கையை நிலைநாட்டிய கார்ல் மார்க்ஸுக்கு உற்ற துணையாக விளங்கிய ஏங்கல்ஸ் போல, சமூக நீதிக் கொள்கையை நிலைநாட்டிட தலைவர் கலைஞருக்கு உற்றப் பெருந்துணையாக எப்போதும் உடன் இருந்தவர் பேராசிரியர். அந்தக் கொள்கையை உறுதிபடக் காத்திடவும், தி.மு.க-வின் வளர்ச்சியை மென்மேலும் மேம்படுத்தவும் எனக்கு உற்றத் தந்தையைப் போல் எப்போதும் துணை நின்றவர் பேராசிரியர்.
இறுதிவரை மாறாத கொள்கையாளர்
"சுரண்டல் இல்லாத, சுரண்டலுக்கு ஆளாகாத சமுதாயத்தை படைக்க வேண்டும், அதற்கு தடை ஏதும் இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்கும் உரிமையை ஆதிக்கத்தில் இருப்பவர்கள் பறிக்க விட்டுவிடக் கூடாது" - க. அன்பழகன்
இதுவே அவரது இத்தனை ஆண்டுகால மொத்த அரசியல் வாழ்வின் அடிப்படையாகும். இவ்வாறு தான் சொல்லியபடியே வாழ்நாள் முழுவதும் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்த சுயமரியாதைக்காரர் தான் இனமான பேராசிரியர் என்று அவரது இயக்கத் தோழர்களால் அழைக்கப்பட்ட க.அன்பழகன்.
- அறிவுமதி அன்பரசன்