சிதம்பரம் விவகாரம் : எஸ்.ஜி.சூர்யாவிற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சிதம்பரம் விவகாரம் : எஸ்.ஜி.சூர்யாவிற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர் தாக்கப்பட்டதாக செய்தி வெளியிட்ட விவகாரத்தில் இணையதள செய்தி நிறுவன இயக்குனரும்,  தமிழ்நாடு பாஜக மாநில செயலாளருமான எஸ். ஜி.சூர்யாவிற்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலின் கனகசபையில் பக்தர்களை வழிபட அனுமதிக்கும் விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அங்கு பூஜை நடத்திய தீட்சிதர் ஒருவரைத் தாக்கி பூணூலை அறுத்ததாக ‘தி கம்யூன்’ என்ற இணையதள செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

இரு பிரிவுகளுக்கிடையே மோதல் ஏற்படும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறி, சிதம்பரம் நகர கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜூதின் என்பவர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஜூன் 28-ம் தேதி அளித்த புகாரில் செய்தி நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பாஜக மாநில செயலாளருமான எஸ். ஜி.சூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிக்க : இப்படி வந்து மாட்டிக்கிட்டியே பங்கு!

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ். ஜி.சூர்யா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பொதுமக்கள் யாரும் புகார் அளிக்காத நிலையில், ஆளும் கட்சி நிர்வாகத்தில் அக்கறை கொண்ட நபரும், அரசு அதிகாரியுமான கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் மறு உத்தரவு வரும்வரை, காலையும், மாலையும் கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் எஸ். ஜி.சூர்யாவிற்கு முன்ஜாமீன் வழங்கி  உத்தரவிட்டார்.