நிர்வாக அதிகாரியை மாற்றகோரி பட்டினி போராட்டத்தில் இறங்கிய லட்சத்தீவு மக்கள்: கடலுக்கு அடியே, கடற்கரை, வீடுகளிலிருந்து மக்கள் போராட்டம்...
லட்சத்தீவில், மத்திய அரசு நியமித்த நிர்வாக அதிகாரியின் உத்தரவுகளுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் வெடித்துள்ளது.
இந்தியாவின் பூகோளம் மற்றும் கலாசார பன்முகத்தன்மையின் எடுத்துக்காட்டாக லட்சத் தீவு விளங்குகின்றது. இங்குள்ள 36 தீவுகளில் 10 தீவுகள் மனிதர்களின் இருப்பிடமாகவும், ஒரு தீவு சுற்றுலாப் பயணிகளுக்கான தீவாகவும் உள்ளது. இங்கு குஜராத்தை சேர்ந்த பிரஃபுல் படேல், நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர், கடலோர மக்களின் குடியிருப்புகளை அகற்றுவது, மதுபான பார்களுக்கு அனுமதி அளிப்பது, மாட்டிறைச்சிக்குத் தடை விதிப்பது என அடுத்தடுத்து சர்ச்சை உத்தரவுகளை பிறப்பித்திருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அங்கு வசிக்கும் பெரும்பாலான முஸ்லீம் மக்களை குறிவைத்தே மாட்டு இறைச்சிக்கு தடை விதித்துள்ளதாக அங்குள்ளோர் கொதித்தெழுந்துள்ளனர்.
மேலும் இரண்டு குழந்தைகளுக்கு மேலுள்ள பெற்றோர் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற உத்தரவும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நியமித்திருக்கும் நிர்வாக அதிகாரியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் திமுக மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் அங்கு போராட்டம் வெடித்துள்ளது.
பிரபுல் பட்டேலை மாற்றக்கோஅங்கு வசிக்கும் மக்கள் வீடுகள், கடலுக்கு அடியே, கடற்கரை பகுதிகளில் போராட்டத்தில் குதித்துள்ளனர். சுமார் 12 மணி நேரம் வரை அவர்கள் நடத்தும் இந்த பட்டினி போராட்டம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.