நாகை-இலங்கை பயணிகள் கப்பல்: துவக்க நாளில் 75% கட்டண சலுகை!!!
நாகை-இலங்கை பயணிகள் கப்பல் சேவை வரும் அக்.14 துவங்க உள்ள நிலையில் 5 சதவீதம் சிறப்பு சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை - இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை "செரியாபாணி" என பெயரிடப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை துவங்க ரூபாய் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகை துறைமுகத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் கப்பல் போக்குவரத்து சேவைக்கான சோதனை ஓட்டம் நடைபெற்று அக்.14ல் பயணிகள் போக்குவரத்து சேவை மத்திய அமைச்சர்களால் துவங்கி வைக்கப்பட உள்ளது. கப்பலில் பயணம் மேற்கொள்ள பயண கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ 6500 + 18 % ஜிஎஸ்டி வரியோடு ரூ. 7670 நிர்ணயிக்கப்பட்டுள நிலையில், துவக்க விழாவை முன்னிட்டு 75% சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்து கழகத்தின் உத்தரவின் படி அக்டோபர் 14ஆம் தேதி அன்று ஒருநாள் மட்டும் 2375 +18 % வரியுடன் நபர் ஒன்றுக்கு ரூ 2803 பயண கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 30 பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் சலுகை விலை அறிவிப்பால் கூடுதலாக பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிறப்பு சலுகை விலை டிக்கெட் அறிவிப்பால் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகர்கள் உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.