புலம்பெயர் தமிழ் மக்களை பாதிக்கும் இலங்கையின் 22 ஆவது திருத்தச் சட்டம்-கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தைக் கூட பெற முடியாத, வெல்ல முடியாத ஒரு கட்சியின் நியமன உறுப்பினர் இன்று குடியரசுத் தலைவராக  வந்து, மக்கள் விரட்டியடிக்க இருந்த கள்ளக் கூட்டத்தால்  நியமிக்கப்பட்டு,  ஆட்சியை பிடித்துள்ளார். 

புலம்பெயர் தமிழ் மக்களை பாதிக்கும் இலங்கையின் 22 ஆவது திருத்தச் சட்டம்-கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

இலங்கை அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் என்ற பெயரில் 21 ஆவது திருத்தமாக நிறைவேற்றப்பட்ட திருத்தமானது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது. இது குறித்த விவாதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியாகிய நாங்கள் எங்களுடைய ஆதரவை தரமுடியாது என பகிரங்கமாக தெரிவித்து வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்திருந்தோம் என அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திற்கே அதிகாரம் வேண்டும்

எங்களது நியாயப்பாடுகளை நாங்கள் பகிரங்கமாக பதிவு செய்திருந்தோம். இது தொடர்பில் பொது மக்களுக்கு சொல்லப்படுகின்ற  காரணங்கள் நடைபெற்று இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். முதலாவதாக நாட்டின் மக்கள் நிறைவேற்று அதிகார குடியரசுத் தலைவர் முறையை நீக்க வேண்டும், அதாவது அடிப்படையிலேயே அதனை மாற்றம் வேண்டும் என போராடி  வந்தனர். இந்த நிறைவேற்று அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்களை கொண்டு வருவதாக  சுட்டிக் காட்டி தான் இந்த திருத்தத்தை கொண்டு வர முயற்சித்தார்கள். 

சட்ட திருத்தம் குறித்து உச்சநீதிமன்றம்

திருத்தம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றதன் பின் எடுத்துப் பார்த்தால் ஜனாதிபதியினுடைய ஒரு அதிகாரத்தையும் அவர்கள் குறைக்கவில்லை. நிறைவேற்று  அதிகார ஜனாதிபதி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவே இருக்கின்ற நிலையில், அதில் இருந்து அதிகாரத்தை குறைத்ததாக எதுவுமே இல்லை என்பது தான் எங்களுடைய முதலாவது வாதம். 

ஜனநாயக மாற்றம்

ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்தும் கோணத்தில் சுதந்திரமான ஆணைக் குழுக்களை அமைக்கலாம் எனக் கூறப்பட்டது.  ஆனால் அந்த ஆணைக்குழுக்களை பார்க்கும் போது அதனை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவரின் கையில் தான் இருக்கிறது. அதாவது குடியரசுத் தலைவர்  விரும்பாவிட்டால் ஆணைக்குழுக்கள் பரிந்துரைப்பு செய்தாலும் நியமிக்கப்படாமல் இருக்கும். எனவே நியமிப்பது குடியரசுத் தலைவரின் கையில் தான் இருக்கின்றது. அதுமட்டுமல்லாது, அந்த ஆணைக்குழுக்களை நியமித்தாலும் கூட  அரசு தரப்பிற்கு பெரும்பான்மை இருக்கும் வகையில் தான் அது தயாரிக்கப்பட்டுள்ளது. அப்படியெனில் அதற்கான சுதந்திரம் எங்கே இருக்கிறது.  

இரட்டைக் குடியுரிமை நீக்கமா?

அது தவிர, இரட்டை குடியுரிமையை நீக்குவதாக சொன்னார்கள். இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாட்டில் முக்கியமான பதவிகளுக்கு வருதை தடுத்து இருக்கிறோம் என அவர்கள் சொன்னார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரை, எங்கள் மக்களை திட்டமிட்ட வகையில் இனவழிப்பை செய்து, எமது மக்களை விரட்டியும் தள்ளியுள்ளீர்கள். தமிழ்  தேசத்தின் அரைவாசி சனத்தெகை மேற்கு நாடுகளிலும், வெளிநாடுகளிலும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விரும்பிப் போகவில்லை. இங்கு  வாழ முடியாத படி திட்டமிட்டு துரத்தினார்கள். 

அந்த மக்கள்  எங்களது மக்கள் என தாயகத்தில் இருக்கும் மக்கள் சொல்கிறார்கள். அவர்கள் இல்லாவிடின் நாங்கள் இல்லை. அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்யவில்லை. முழுக்க முழுக்க எங்களது  புலம்பெயர்  தமிழ் மக்கள், எங்கள் மீது வைத்துள்ள பாசத்தாலும்,  எங்கள் உறவு என்ற வகையிலும் அந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.  எங்களை  இங்கு படிக்க வைக்க முடியாத நிலையில் அவர்கள் எங்களை வெளிநாடுகளக்கு அழைத்து படிக்க வைக்கிறார்கள். 

எமது தேசத்தின் மூளையே புலம்பெயர்ந்து இருக்கிற நிலையில் அவர்களது பங்களிப்பு எங்களுக்கு அத்தியாவசியமானது. இங்கிருந்து தப்பிபோன மக்கள் அந்த அந்த நாடுகளில் மிகத் திறைமையாக தங்களது  தொழில் ரீதியாக வளர்ந்திருக்கும் நிலையில் எங்களது தேசத்தை கட்டியெழுப்ப அவர்களை வரவேற்க வேண்டும். அவர்கள் எங்களது தேசத்தவர்கள். அவர்கள் வெளிநாடுகளில் வாழ்வதாற்காக  எங்களது தேசத்துடன் சம்மந்தம் இல்லை என சொல்ல முடியாது. 

தாயகத்தில் புலம்பெயர் தமிழர்களும் அங்கம்

தமிழ் தேசம் எனப் பேசுகின்ற போது தாயகத்தில் இருக்கிற சனத்தொகையுடன், புலம்பெயர் தமிழ்  மக்களும் அதன் ஒரு அங்கம். நீங்கள் செய்த அநியாயத்தால், நீங்கள் கொள்ளையடிக்க  கள்ளரை நியமித்தால் நாங்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும். எங்கட தேசம் ஏன் பாதிக்கப்பட வேண்டும். நாங்கள் உங்கள் தேசத்தில் வந்து கொள்ளையடித்தனாங்களா?, உங்கள் தேசத்தில் ஏதும் களவெடுத்தனாங்களா? எங்களது உரிமைக்காக தான் நாங்கள் போராடுகிறோம். எங்களுக்கு இருக்க கூடிய எங்களது சொத்தை நீங்கள் செய்த அநியாயத்திற்காக, உங்களது சொந்த மக்களை நீங்கள் அடித்ததிற்கு, அதை நாம் ஏன் கைவிட வேண்டும். அதில் என்ன நியாயம் இருக்கிறது. ஆகவே, இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான தீர்மானம் எங்களது புலம்பெயர் உறவுகளை பாதிக்கும். அதனை நாம் ஏன் ஏற்க வேண்டும். 

எங்களைப் பொறுத்தவரை இந்த திருத்தம் என்பது முழுக்க முழுக்க போலி காரணத்தை காட்டி எந்தவித அங்கீகாரமும் இல்லாது, ஆட்சியில் உள்ள கள்ளக் கூட்டம் நிறைவேற்றியுள்ளது. ஒரு இடத்தைக் கூட பெற முடியாத, வெல்ல முடியாத ஒரு கட்சியின் நியமன உறுப்பினர் இன்று குடியரசுத் தலைவராக  வந்து, மக்கள் விரட்டியடிக்க இருந்த கள்ளக் கூட்டத்தால்  நியமிக்கப்பட்டு,  ஆட்சியை பிடித்துள்ளார். 

இது ஜனநாயகவாதிகள் எனக் காட்டிக் கொள்ள எடுத்த நாடகமே தவிர ஜனநாயகத்தை நோக்கி பயணிக்க ஆரம்ப புள்ளி கூட இதில் இல்லை. அதை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு போவதற்கு பதிலாக, சிங்கள தலைவர்கள் மீண்டும் அவர்களை ஏமாற்றிய நிலையில், தமிழ் தலைவர்கள்  உங்களை ஏமாற்றவில்லை. அந்த உண்மையை நாம் பதிவு செய்துள்ளோம். சரித்திர ரீதியாக சிங்கள மக்கள்  திரும்பி பார்க்கும் போது நேர்மையாக இருந்த இரண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னனி உறுப்பினர்கள் என்பதை காலம் காட்டும். இவ்வாறான நிலையிலேயே நாம் 22 ஆவது திருத்த சட்டத்தை பகிஸ்கரித்து வாக்களிப்பில் கலந்து கொள்ள வில்லை என்பதை பதிவு செய்கின்றோம் என்றார்.