"பாசிசவாதிகளே...எங்கள் மண்ணில் உங்களுக்கு என்ன வேலை? ” ரஷிய போர் வீரரிடம் ஆவேசமாக பேசிய பெண்ணின் வீடியோ வைரல்!!
ரஷிய போர் வீரரை நோக்கி பெண் ஒருவர் ஆவேசமாக பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
உக்ரைன் நாட்டின் மீது நேற்று ரஷ்யா போர் தொடுத்திருந்த போது, அதில் சரமாரியாக குண்டு வீச்சுகள் நிகழ்ந்தது. மேலும், இந்தப் போரில் தொடரப்பட்ட ஏவுகணை தாக்குதல் மூலம் உக்ரைன் நிலைகுலைந்து காணப்பட்டது.
நேற்றைய தாக்குதலின் போது உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 137 பேர் பலியானதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் 2 ஹெலிகாப்டர்களை உக்ரைன் படையினர் வீழ்த்தினர். 2 ரஷிய துருப்புகளை உக்ரைன் ராணுவம் சிறைப்பிடித்தும் இருக்கிறது.
மேலும், ரஷியாவிடம் இருந்து கீவ் விமான நிலையத்தை மீண்டும் கைப்பற்றி உள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.மேலும், ரஷியாவுக்கு எதிராக முழு ராணுவத்தையும் திரட்டும் பணிகளை விரைந்து முடிக்கும்படி ராணுவ அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஆபத்து நிறைந்த கீவ் நகருக்குள் எந்நேரம் வேண்டுமானாலும் ரஷியா நுழைந்துவிடும் என்பதால், அதை தடுக்கும் விதமாக அந்நகரை இணைக்கும் பாலங்கள் மற்றும் சாலைகளை உக்ரைன் தகர்த்து வருகிறது.
இந்நிலையில் பல தடைகளையும் மீறி ரஷிய வீரர் ஒருவர், கீவ் நகருக்குள் ஊடுருவி உள்ளார். அந்த வீரரை பார்த்து, ‘"உங்களுக்கு எங்கள் மண்ணில் என்ன வேலை?" என்று கேள்வி எழுப்பிய உக்ரைன் பெண்ணின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அந்தப்பெண், ஆயுதம் ஏந்தி நிற்கும் ரஷிய வீரரைப் பார்த்து, "நீங்கள் யார்?" எனக் கேட்கிறார். அந்த வீரர் "எங்களுக்கு இங்கே வேலை இருக்கிறது. நீங்கள் அந்தப் பக்கம் செல்லுங்கள்" எனக் கூறுகிறார். "பாசிசவாதிகளே... இங்கே உங்களுக்கு என்ன வேலை?" என்று மீண்டும் அந்தப் பெண் உக்கிரமாகப் பேசுகிறார். அதற்கு அந்த வீரர் நிதானமாக, "நமது பேச்சால் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் செல்லலாம்" எனக் கூறுகிறார். ஆனால், அதற்கு சற்றும் சமாதானம் ஆகாத அந்தப்பெண், அந்த வீரரிடம் உங்கள் பாக்கெட்டில் கொஞ்சம் சூரியகாந்தி விதையைப் போட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் வீழ்த்தப்பட்டு உக்ரைனில் புதைக்கப்படும் போது அந்த விதையாவது வளரட்டும் என்று கூறி விட்டு செல்கிறார். அவர் ஏன் சூரியகாந்தி விதையை கூறீயிருக்கிறார் தெரியுமா? ஏனென்றால், சூரியகாந்தி மலர், உக்ரைன் நாட்டின் தேசிய மலராம்.
இப்படி அந்தப் பெண் சற்றும் அஞ்சாமல் ரஷிய வீரரிடம் நேருக்கு நேர் வாதிடுவதை பார்த்த வழிப்போக்கர் ஒருவர் அதனை வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர, அது தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
In this video, a Ukrainian woman is confronting Russian soldiers in the Henychesk, Kherson region of #Ukraine.
— Silenced Dogreat (@DogreatSilenced) February 25, 2022
She asks them why they came to our land and urges to put sunflower seeds in their pockets [so flowers would grow when they die on Ukrainian land].#UkraineStrong pic.twitter.com/zl5EmhLN99