இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்... காற்றில் கரையும் தமிழ்நாட்டு மீனவர்களின் ஓலம்!!

நாகையை சேர்ந்த மீனவர்கள் வழக்கம் போல் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற போது இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்களை தாக்கிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் கிராமத்தை சேர்ந்த சபாபதி என்பவரது விசைப்படகில், அவருடைய மகன்கள் பிரதீப், பிரகாஷ், பிரவின், திருமுருகன் உள்ளிட்ட 4 பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

இந்திய எல்லையான பத்து நாட்டில்கள் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், 4 மீனவர்களையும் பயங்கரமாக தாக்கிவிட்டு கத்தி முனையில் மீன்கள் மற்றும் தளவாட பொருட்களை கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. 

அப்போது நாகை மீனவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இலங்கை கடற்கொள்ளையர்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். மேலும் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலை, 50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், ஜிபிஎஸ் கருவி , 4 செல்போன்களையும், பறித்துகொண்டு தப்பியோடினர் . 

பின்னர் செருதூர் கரைக்கு திரும்பிய மீனவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவத்திற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாகை மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிக்க || கூட்டணி குளறுபடி: "அண்ணாமலையின் மறைமுக மிரட்டலுக்கு அதிமுக அஞ்சாது"-ஜெயக்குமார்!!