காங்கிரஸ் கட்சிக்காக இனி வேலை செய்ய போவதில்லை - தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அதிரடி!
காங்கிரஸ் கட்சிக்காக இனி வேலை செய்ய போவதில்லை என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலம் முழுவதும் 'ஜன் சுராஜ்' என்ற பெயரில் யாத்திரை நடத்தி வருகிறார். அதையொட்டி, வைஷாலி மாவட்டத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைக்கேற்ப காங்கிரஸ் கட்சி தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்றும் தான் நல்ல யோசனைகளை சொன்னபோதிலும், தனது வியூகத்தை மாற்றிக் கொள்ள காங்கிரஸ் முன்வரவில்லை என்றும் கூறினார்.
தனது 10 ஆண்டு கால அனுபவத்தில் பல அரசியல் கட்சிகளுக்கு வெற்றி தேடி தந்துள்ளதாக தெரிவித்த அவர், 2017 ஆம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் தனக்கு கசப்பான அனுபவமாக அமைந்ததாகவும் காங்கிரஸ் தனது சொந்த தவறுகளால், அவமானகரமான தோல்வியை சந்தித்ததாகவும் குறிப்பிட்டார்.