"தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை மருத்துவ கட்டமைப்பு உயர்ந்த நிலையில் இருக்கிறது...! " - அமைச்சர் தாமோ அன்பரசன்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தென்னிந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் நடத்தப்படும் மருத்துவ துறையில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI பயன்பாடு குறித்த மெட் டெக் கருத்தரங்கினை சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் தொடங்கி வைத்த பின் மேடையில் உரையற்றினார்.
அப்போது பேசிய அவர் :-
" உலக சுகாதார அமைப்பு 1000 நபர்களுக்கு ஒரு மருத்துவர் வேண்டும் என தெரிவித்து உள்ளது. குறிப்பாக, வட மாநிலங்களில் 3000 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையும், தென் மாநிலங்களில் 500 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையும் இருந்து வருகிறது" . ஆனால், தமிழ்நாட்டை பொறுத்த வரையில் 250 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை இருப்பதாக கூறினார். மேலும், தமிழகத்தில் சுகாதார கட்டமைப்பு சிறப்பாக உள்ளதாகவும், கிராமம் முதல் நகரம் வரை உயர்ந்த நிலையில் மருத்துவ கட்டமைப்பு இருப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா காலத்தில் கூட நமது உயர் தர மருத்துவ சிகிச்சையால் நாம் வென்று காட்டி உள்ளோம். அரசு மருத்துவமனையுடன் இணைந்து தனியார் மருத்துவமனை சிறப்பாக பணியற்றியதாக கூறினார். தமிழகத்தில் தான் அரசு மருத்துவமனையில் 35 கோடி மதிப்பில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மையம்
ஓமந்தூரர் மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது என்றார்.
மேலும், தமிழக மருத்துவத்துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 1.50 கோடி பேர் முதல் முறை சிகிச்சை மூலமாகவும் 3 கோடி பேர் தொடர் சிகிச்சையின் மூலமாகவும் பயன் பெற்று உள்ளனர். அதேபோல, வரும் முன் காப்போம் திட்டம் 1850 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 16 லட்சம் பேர் பயன் பெற்று உள்ளதாக கூறினார்.
சிறு குறு நடுத்தர தொழில் துறையை பொறுத்த வரையில் 42 கோடியே 6 லட்சம் மானியம் வாங்கி மருத்துவ துறையில் புதிய தொழில் முனைவோரை உருவாக்கி உள்ளோம். வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்கள் உயர்தர சிகிச்சை பெற வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் 43 கோடி மானியம் மற்றும் 193 கோடி கடன் வழங்கப்பட்டு மொத்தமாக 161 இளைஞர்கள் மருத்துவத்துறையில் தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்.
எம்.எஸ்.எம்.இ. தொழில் நிறுவனங்களின் தரத்தினை உலக அளவில் உயர்த்த மெகா கிளஸ்டர்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்து அமைச்சர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசின் 71 கோடி ரூபாய் மானியத்துடன் 155 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் மருந்தியில் பெருங்குழும பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதனை முதலமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இதுவரை 26 ஆயிரம் இளைஞர்களுக்கு 700 கோடி ரூபாய்க்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. 2600 கோடி ரூபாய் கடன் உதவி செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
தொழில்துறையில் 14 ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாடு 3 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. மேலும், உலக முதலீட்டார்கள் மாநாட்டுக்கு தேவையான ஏற்பாடுகளை அரசு சிறப்பாக செய்து வருகிறது என்றார்.
இதையும் படிக்க | 7 வது நாளாக முடங்கியது நாடாளுமன்ற அவைகள்...!மத்திய அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!