என்னது நிலவில் இருக்கும் மண் நம்ம ஊர்ல இருக்கா?.... நாமக்கல் மண்ணில் நடந்த லேண்டர் சோதனை

என்னது நிலவில் இருக்கும் மண்  நம்ம ஊர்ல இருக்கா?.... நாமக்கல் மண்ணில் நடந்த லேண்டர் சோதனை

சந்திரயான் - 3 விண்கலத்தில் பயணிக்கும் லேண்டர், ரோவர் ஆகிய உபகரணங்கள், நிலவில் இறங்குவதற்கு முன்பாக, நாமக்கல்லில் உள்ள குன்னமலை கிராமத்தில் தோண்டி எடுக்கப்பட்ட அனார்தசைட் மண் மாதிரியில் தரையிறக்கி, இஸ்ரோ சோதித்துப் பார்த்து வெற்றி கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சரி குன்னமலைக்கும், சந்திரயானுக்கும் என்ன சம்பந்தம்? எளிதாக சொல்ல வேண்டுமானால், நிலவில் இருக்கும் மண் மாதிரி, நம் குன்னமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பெரிய அளவில் அதிசயிக்க வைத்தாலும், அதை வைத்து விஞ்ஞானிகள் பல கட்ட சோதனைகளை செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.                               

விண்வெளித் துறையில் வல்லரசு நாடுகளுக்கு இணையாகப் போட்டி போடும் இஸ்ரோ சார்பில் கடந்த 2008 அக்டோபர் 22 இல் சந்திரயான் -1 விண்கலம் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சந்திரயான் - 1 விண்கலம் நிலவின் வட  துருவத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டு,  நிலவின் பரப்பில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2019-ம் ஆண்டு நிலவை மேலும் ஆய்வு செய்யும் வகையில் சந்திரயான் - 2  திட்டத்தை இஸ்ரோ முன்னெடுத்தது. அதன்படி, நிலவின் மேற்பரப்பையும், தென்துருவ முனையையும் ஆய்வு செய்யும் வகையில் விண்கலம் உருவாக்கப்பட்டு சந்திரயான் - 2 விண்கலம்  ஜிஎஸ்எல்வி  எம்கே 3 ராக்கெட் மூலம்  விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திராயன் 2 வில் உள்ள விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இந்த திட்டம் தோல்வி அடைந்தது.

முன்னதாக, சந்திரயான் -2 விண்கலத்தில் உள்ள லேண்டர், ரோவர் ஆகியவை சரியாக தரையிறங்குகிறதா என்பதை ஆய்வு செய்ய நிலவு உள்ள மண் தேவைப்பட்டது. அந்த மண் அமெரிக்காவின் நாசாவிடம் இருந்து 1 கிலோ இந்திய மதிப்பில் 15,000 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய சூழல் இருந்தது. அதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்தியாவில் அந்த வகை மண் உள்ளதா என்பதை ஆய்வு செய்த போது, அந்த வகை மண் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுாரை அடுத்துள்ள குன்னமலை, சித்தம்பூண்டி, பாமாகவுண்டன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கிடைப்பது தெரிய வந்தது. 

இதனையடுத்து, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள புவியியல் துறை பேராசிரியர்கள் துணையுடன், சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ததில், அந்த மண்ணில் நிலவில் உள்ள மண் போல அனார்தசைட் என்ற பொருள் இருந்தது தெரியவந்தது. 

அதனையடுத்து மண் மற்றும் பாறைகள் என சுமார் 50 டன் அளவுக்கு பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மண் மாதிரிகளைக் கொண்டு சிறப்பு ஆய்வகம் உருவாக்கப்பட்டு, சந்திரயான் - 3 லேண்டர் மற்றும் ரோவர் நிலவின் பரப்பில் பத்திரமாக இறக்குவதை போல், இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக தரையிறக்கி சோதித்துப் பார்த்துள்ளனர்.

பொதுவாக மண் என்பது இளம் சிவப்பு அல்லது கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். ஆனால் சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை பகுதியில் உள்ள மண் என்பது வெண்மை நிறத்தில் காணப்படும். எனவே இந்த மண்ணை வைத்து சந்திராயன் 2 மற்றும் 3 பரிசோதனை செய்தது நாமக்கல் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க   | சந்திரயான் குறித்த விழிப்புணர்வு; விக்ரம் லேண்டர் மினியேச்சர் உருவாக்கம்!