மகளிர் உரிமைத் தொகையை பிடித்தம் செய்த வங்கிகள்; தடுக்க கோரி முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்!

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தை வங்கிகள் பிடித்தம் செய்வதை தடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வங்கி கணக்கில் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டம் குடும்பத் தலைவிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வங்கிகள், சேமிப்பு கணக்கு அல்லது நடப்பு வங்கி கணக்கு வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகை (Minimum Balance) இல்லாவிட்டால் தற்பொழுது தமிழக அரசு அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ள ரூபாய் 1000/-த்திலிருந்து குறைந்தபட்ச தொகை இல்லாததற்கான தண்டத் தொகையும், குறுஞ்செய்தி அனுப்பியதற்கான தொகையையும் வங்கிகள் அவர்களது கணக்கிலிருந்து எடுத்துக் கொள்கின்றன. இதனால் சம்பந்தபட்ட குடும்பத் தலைவிகள் ஆயிரம் ரூபாயை முழுமையாக பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதனை தடுக்க ஆவண செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தங்களது வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச தொகையை வைக்க முடியாதவர்கள் ஒவ்வொரு மாதமும் இந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும். இதனால், அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை முழுமையாக அவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும் என தெரிவித்துள்ள அவர்,  தமிழக அரசு வங்கித்துறை அதிகாரிகளுடன் பேசி குறைந்தபட்ச தொகை (Minimum Balance) இல்லை என்கிற காரணத்தினால் எந்த தொகையும் பிடித்தம் செய்யாமல் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 முழுமையாக சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்கச் செய்திட உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். 

இதையும் படிக்க: திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை...!