தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்... வைகோ...!!

தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்... வைகோ...!!

உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும் தொழிலாளர் வேலை நேர சட்ட திருத்த முன்வரைவை திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரியுள்ளார். 

நேற்று நிறைவடைந்த நிதிநிலை அறிக்கை கூட்டதொடரில் இறுதியாக தொழிலாளர்களின் வேலை நேரத்தை நீட்டிக்கும் விதமாக தொழிலாளர் சட்ட திருத்த மசோதா தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசனால் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அப்போது திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, மனித நேய மக்கள் கட்சி போன்றவை இச்சட்ட மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. கூட்டணி கட்சிகளின் எதிப்பையும் மீறி இம்மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. இதனால் விசிக, சிபிஐ, சிபிஎம், மனித நேய மக்கள் கட்சி போன்றவை அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
 
இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் அமைப்புச்சாரா உடல் உழைப்புத் தொழிலாளர்களும், விவசாயத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் எனக்கூறியுள்ள அவர் தற்போது கொண்டுவந்திருக்கின்ற சட்டத் திருத்த முன் வரைவு பற்றி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், “அனைத்து நிறுவனங்களுக்கும் இச்சட்டம் பொருந்தாது. விரும்பக் கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்” என்று அளித்துள்ள விளக்கத்தை பொருத்தமற்றது என சாடியுள்ளார்.

மேலும், 8 மணி நேரம் வேலை என்பதை 12 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டு, தொழிற் நிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கு இச்சட்டம் சட்டபூர்வ அங்கீகாரத்தை அளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ள வைகோ, தற்போது 8 மணி நேரம் வேலை என்ற சட்டம் நடைமுறையில் இருக்கும்போதே உற்பத்தித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் பணியாளர்கள் 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யும் பணிச் சூழல்தான் இருப்பதாக வேதனையை பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்துள்ள விளக்கத்தில், “தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் நம்முடைய தொழிலாளர்களின் வேலை நேரத்தில் ஒரு நெகிழ்வுத் தன்மை  இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
மின்னணுவியல் துறை, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தித் துறை, மென்பொருள்துறை ஆகிய தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும். ஒட்டுமொத்த பணி நேரம் வாரத்திற்கு 48 மணி நேரம் என்பது மாறாது. 4 நாட்கள் வேலை செய்துவிட்டு, 3 நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்'' என்று குறிப்பிட்டு இருப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது  எனவும் வைகோ விமர்சித்துள்ளார்.

எனவே ஒட்டுமொத்த தொழிலாளர் நலனுக்கு எதிரான 65ஏ சட்டத் திருத்த முன்வரைவை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசை அவ்வறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.