மோடியின் பகல் கனவு பலிக்காது…வைகோ சொன்னது என்ன?

மோடியின் பகல் கனவு பலிக்காது…வைகோ சொன்னது என்ன?

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- திராவிட மாடல் ஆட்சியை மிக வெற்றிகரமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடந்து வருகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பின்னர் சிறந்த ஆட்சி நடைபெற முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது. ஆதிக்க சக்திகள், சங்பரிவார் சக்திகள் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணித்து தமிழகத்தை கைப்பற்றலாம் என நினைக்கும் கனவு ஒரு போதும் நிறைவேறாது.

பல்வேறு தேசிய இனங்களை கொண்ட நாடு இந்தியா. நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என அழைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தேன். திராவிட இயக்க சக்திகள் தமிழ் உணர்வு கொண்டவர்கள். வீறு கொண்டு எழுந்து திராவிட இயக்க கோட்டையை பாதுகாக்க வேண்டும்.

திராவிட ஆட்சிக்கு அரணாக இருப்பது மட்டு மல்லாமல் இந்துத்துவா முறியடிக்க வேண்டும். திராவிட இயக்க சக்திகளின் உணர்வுகளால் தான் இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் கால் எடுத்து வைக்க முடியவில்லை. தமிழகத்தில் கால் எடுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க.வினர் தினம் தோறும் அறிக்கை, பேட்டி உள்ளிட்டவைகளை கொடுத்து வருகின்றனர்.திராவிட மாடல் ஆட்சி என்பது ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட கோட்டை என்பதை மறந்து விட்டார்கள்.