அமித்ஷா பெரிய சங்கி, அண்ணாமலை சின்ன சங்கி: பாஜக மாவட்ட தலைவர் பேச்சால் தொண்டர்கள் குழப்பம்...

அமித்ஷா பெரிய சங்கி, அண்ணாமலை சின்ன சங்கி என பா.ஜ.க மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலைக்கு திருப்பூரில் கொடுக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பேச்சால் தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர்.

அமித்ஷா பெரிய சங்கி, அண்ணாமலை சின்ன சங்கி: பாஜக மாவட்ட தலைவர் பேச்சால்  தொண்டர்கள் குழப்பம்...

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் பாஜக தமிழக தலைவராக பொறுப்பேற்க செல்லும் அண்ணாமலைக்கு சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலையை வரவேற்று பேசிய திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில்வேல், அமித்ஷா என்ற பெரிய சங்கியின் லேட்டஸ்ட் உற்பத்தி தான் இந்த சின்ன சங்கி அண்ணாமலை அவர்கள் என பேசினார்.

தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வருவது முக்கியமல்ல. தமிழக மக்களுக்கு திராவிட கும்பலில் இருந்து விடுதலை பெற அண்ணாமலை முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது விதியாகும். எனவே திருப்பூருக்கு வருகை தந்துள்ள முன்னாள் காக்கியும், இந்நாள் சங்கியுமான அண்ணாமலை அவர்களை வரவேற்புரை ஆற்றுமாறு அழைக்கிறேன் என பேசினார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில் வேல் பாராட்டுகிறாரா? அல்லது கிண்டல் செய்கிறாரா? என தெரியாமல் பலர் குழப்பத்தில் ஆழ்ந்தனர். சிலர் நகைச்சுவையாக பேசுவதாக எண்ணி நகைத்தனர்.

இதனையடுத்து பேசிய அண்ணாமலை, உண்மையான சித்தாந்தம் கொண்ட கட்சி பா.ஜ.க, சித்தாந்தத்தின் அடிப்படையில் எந்த கட்சியும் நம் முன் நிற்க முடியாது. நாட்டுப்பற்று, தேசிய பற்று கொண்ட கட்சி பா.ஜ.க. இத்தனை காலமாக பா.ஜ.கவிற்கு தமிழகம் தேவைப்பட்டது. தற்போது தமிழகத்திற்கு பா.ஜ.க தேவைப்படுகிறது. தி.மு.கவின் ஆட்சி பொய்யை மட்டுமே மூலதனமாக கொண்டு நீட் வேண்டாம், புதிய கல்விக் கொள்கை வேண்டாம் என கூறுகிறார்கள்,


தி.மு.க சரியாகவும் ஆட்சி செய்யவில்லை, தடுப்பூசியை கொடுப்பது பிரதமர் ஆனால் திமுகவினர் டோக்கன் வாங்கி விடுகின்றனர். சாதாரண பொதுமக்களுக்கு தடுப்பூசி வரவில்லை, தி.மு.க குடும்பத்தினருக்கு மட்டுமே தடுப்பூசி செல்கிறது. இதனை மறைக்கவே மோடி தடுப்பூசி தரவில்லை என்கின்றனர். மக்களுக்கு பா.ஜ.க, பிரதமர் மோடி மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது.



மத்திய அரசின் திட்டத்தில் அதிகம் பயனடைந்த ஊர் திருப்பூர் முத்ரா திட்டத்தில் திருப்பூர் இந்திய அளவில் முதலிடம், களத்தில் அதிகமாக பணியாற்றுவோம். இது உண்மையான தொண்டர்கள், தலைவர்கள் உள்ள கட்சி மற்றவர்கள் குடும்பத்திற்காக கட்சி நடத்துகின்றனர். இனியும் நாம் பொறுக்க முடியாது. ஆட்சிக்கு வந்தாக வேண்டும், நமது நல்ல சித்தாந்தங்களையும், பிரதமரின் திட்டத்தையும் வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும். அதிரடியாக அசுரத்தனமாக பாஜக வளர்ச்சி பெறும். தமிழகத்தை மாற்றி காட்டுவோம் என பேசினார். அண்ணாமலை பேசும் போது லேசான தூறல் பெய்தது. அதனை பொருட்படுத்தாமல் பேசினார்.