"உரிமை தொகைக்கான குடும்ப தலைவிகளை அடையாளம் காண சிறப்பு முகாம்கள்" மேயர் பிரியா!

"உரிமை தொகைக்கான குடும்ப தலைவிகளை அடையாளம் காண சிறப்பு முகாம்கள்" மேயர் பிரியா!

சென்னை மாநகராட்சியில் மகளிர் உரிமை தொகை பெற தகுதியான குடும்ப தலைவிகளை அடையாளம் காண ஜூலை 24-ம் தேதிக்கு பிறகு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்.

2023-24 சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட கல்வித் துறை அறிவிப்புகளில் 12 அறிவிப்புகளை செயல்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார்,  ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சென்னை பள்ளிகளுக்கு ரூபாய், 35 இலட்சம் மதிப்பீட்டில் 70 Public Address System (PAS) அமைத்தல், சென்னை பள்ளிகளுக்கு தலா ரூ 25,000 வீதம் ரூ5 இலட்சம் மதிப்பீட்டில் இசைக்கருவிகள் வழங்குதல்,  திருக்குறளுடன் அதன் விளக்கமும் கூற வைத்தல், மாணவர்களின் ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்துதல், 100% தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லுதல், சென்னை பள்ளிகளுக்கு முதலுதவிப் பெட்டிகள் வழங்குதல் உள்ளிட்ட 10 அறிவிப்புகளை, செயல்பாட்டிற்கு தொடங்கி வைத்தார், மேயர்.

தொடர்ந்து விழா மேடையில் பேசிய மேயர் பிரியா ராஜன், "இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் 22 அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தோம். ஏற்கனவே இரண்டு அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் பத்து அறிவிப்புகள் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. அதன்படி தனியார் பள்ளிகளுக்கு இணையாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இலட்சினை அமைத்தல்  மற்றும் சென்னை பள்ளி மாணவர்களுக்கு டி-ஷர்ட் வழங்குதல் போன்றவை இன்று முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளது. தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடித்த அறிவிப்புகளில் ஒன்றான மகிழ்ச்சியான வகுப்பு (happy class) என்ற திட்டம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நம் முதல்வரின் இரு கண்களாக கல்வியும், சுகாதாரமும் உள்ளது. கல்விக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது அரசு. ஆகவே மாணவர்கள் தங்கள் இலக்குகளை நோக்கி முன்னேறிச் செல்வதற்காக கடினமாக படிக்க வேண்டும்,  கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், தனியார் பள்ளிகளுக்கு நிகராக சென்னை பள்ளிகளும் செயல்பட வேண்டும் என்று நாள்தோறும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கல்வி செயல்பாட்டிற்காக 22 திட்டங்களை அறிவித்திருந்த நிலையில் அவற்றில் 12 திட்டங்கள் இன்று முதல் செயல்படுத்தப்படுகின்றன. காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை பொறுத்தவரையில், சென்னையில் அம்மா உணவகங்களுடன் இணைந்து நடத்துவதற்கான பணிகள் ஏறக்குறைய  முடிவடைந்துள்ளது. இரண்டு மாதங்களில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு திட்டம் அனைத்து மாநகராட்சி பள்ளிகளிகளில்  செயல்பாட்டிற்கு வர உள்ளது, எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை மாநகராட்சி சார்பில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வழங்குவதில் நிறைய முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் மொத்தமாக 1415 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த ரேஷன் கடைகள் மூலமாகத்தான் மகளிருக்கு எந்த மாதிரி தொகை செல்ல வேண்டியது இருக்கு கண்டறிய உள்ளோம். 500 பேருக்கு ஒருவர் என்று சென்னை மாநகராட்சி சார்பில் ஆட்களை நியமிக்க உள்ளோம். அது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். இதுவரைக்கும் 17 லட்சத்தி 18 ஆயிரத்து 663 ரேஷன் கார்டுகள் பதிவாகியுள்ளது. இந்த ரேஷன் கார்டுகளில் இருந்து எந்தெந்த மகளிருக்கு  உரிமைத்தொகை செல்ல இருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கு பின்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேபோல் சென்னை மாநகராட்சி சார்பில் 3523 முகாம்கள் நடத்த இருக்கிறோம். இந்த  முகாம் மூலமாகத்தான் யார் யாருக்கு இந்த தொகை இருக்கிறது என்பதை கண்டறிய உள்ளது இந்த முகாம் ஜூலை மாதம் 24ஆம் தேதிக்கு தொடங்கப்படும், எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || "டி கே சிவகுமார்க்கு கண்டனம் எழுப்பவில்லை, ஒரு வார்த்தை கூட சித்திராமையாயிடம் புகார் அளிக்கவில்லை" அண்ணாமலை கேள்வி!