பொருட்கள் தரமற்று இருந்தால் நடவடிக்கை என அமைச்சர் எச்சரிக்கை!

பொருட்கள் தரமற்று இருந்தால் நடவடிக்கை என அமைச்சர் எச்சரிக்கை!

நியாய விலைக் கடைகளில் பொருட்களின் தரம் குறைவாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட அமைச்சர் ரகுபதி  கூறியுள்ளார்.  

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பொன்னனூரில்  பகுதி நேர நியாய விலைக் கடையை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது “ஏழை எளிய மக்களுக்கு  கிடைக்க பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக நுகர் பொருள் வாணிப கழகம் மற்றொரு கூட்டுறவு துறை மூலம் பல்வேறு பொருட்கள் தரமானதாக கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலை கடை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நியாய விலைக் கடைகளில் பொருட்களின் தரம் குறைவாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆரோக்கியமான உணவு தான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமையும்” என்று பேசினார்.