கடத்தல் மதுபானத்தை திருட்டுத்தனமாக விற்ற காவல்துறையினர்,..நீங்களே இப்படி செய்யலாமா? 

கடத்தல் மதுபானத்தை திருட்டுத்தனமாக விற்ற காவல்துறையினர்,..நீங்களே இப்படி செய்யலாமா? 

பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை வேறொரு நபருக்கு விற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பொது முடக்கம் காரணமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்ட நிலையில், சட்ட விரோதமாக மதுபானம் விற்கப்படுவதாகப் பரவலாகப் புகார்கள் எழுந்தன. இதைத் தடுப்பதற்காகக் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தினர் அப்பகுதியில் சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்து விற்கப்பட்ட 434 மதுபான பாட்டில்களை மே 8 ஆம் தேதி பறிமுதல் செய்தனர். ஆனால், அதை முறையாக வழக்குப் பதிவு செய்யாமல், தொடர்புடைய நபரை கைது செய்வதை விடுத்து, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனராம். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை காவல் நிலையத்தினர் வேறொரு தனி நபரிடம் விற்றுவிட்டதாகப் புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை துணைக் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேசன் விசாரணை மேற்கொண்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் காவல் துணைத் தலைவரிடம் துணைக் கண்காணிப்பாளர் அறிக்கை அளித்தார்.


இதைத்தொடர்ந்து, திருச்சிற்றம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் அனிதா கிரேசி, உதவி ஆய்வாளர் ராஜ்மோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் துரையரசன், தலைமைக் காவலர் ராமமூர்த்தி ஆகியோரை தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் பிரவேஷ் குமார் இரவு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.