மயங்கிய நிலையிலும் பயணிகளைக் காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுனர்!!

மயங்கிய நிலையிலும் பயணிகளைக் காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுனர்!!

திருப்பத்தூர், நாட்றம்பள்ளி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தை ஓட்டிக்கொண்டு வந்த ஓட்டுநர், திடீரென்று உடல் உபாதைகளால் மயங்கிய நிலையிலும், பேருந்தில் இருந்த சுமார் 60 பயணிகளின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுனர் பழனியும் நடத்துனர் கோபு குமாரும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை வழியாக 60 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் ஓட்டுநர் பழனிக்கு திடீரென உடல்நிலை கோளாறு காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது. தனக்கு மயக்கம் வருவதை, ஓட்டுனர் பழனி உணர்ந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேருந்தில் இருக்கும் 60க்கும் மேற்பட்ட பயணிகளை காப்பாற்ற வேண்டும் என சுதாரித்துக் கொண்ட ஓட்டுனர் பழனி, உடனடியாக தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக பேருந்தை நிறுத்தியுள்ளார். பின்னர் அவரின் நிலைமையை உணர்ந்த பயணிகள் மற்றும் நடத்துனர், பின் இருக்கையில் அவரை படுக்க வைத்துள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்த நபர், ஓட்டுநர் பழனியை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளார். ஓட்டுனரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழகம் மாற்று பேருந்தை ஏற்பாடு செய்து சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க || முதியவரை கவனிக்க ஆள் இல்லை... சாலையில் தூக்கி போட்ட அரசு மருத்துவமனை ஊழியர்கள்!!