பாஜகவினர் கோவில் நிலங்களை கையகப்படுத்த துடிப்பதாக கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

மோடியை விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வைத்து தோற்கடித்துள்ளனர்.

பாஜகவினர் கோவில் நிலங்களை கையகப்படுத்த துடிப்பதாக கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

நாகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30 வது மாநில மாநாடு செப்டம்பர் 17 தொடங்கி 19ம் தேதி வரை நடைப்பெறுகிறது. 

விவசாய சங்கத்தின் பேரணி மற்றும் மாநாடு

மாநாடு தொடக்க நிகழ்ச்சியாக நாகப்பட்டினம் புத்தூரில் இருந்து நாகை அவுரிதிடல் வரை பேரணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய  விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அகில இந்திய  விவசாயிகள் சங்கத்தின்  பொது செயலாளர் ஹன்னன் முல்லா மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரம் கணக்கான விவசாயிகள் கலந்துக் கொண்டனர். 

மோடியை தோற்கடித்த விவசாயிகள்

கூட்டத்தில் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன்,பொதுக் கூட்டங்கள், தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளில் பேசும் மோடி, நாடாளுமன்றத்தில்  உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலும் அளிப்பதில்லை என்றார். பாரதிய ஜனதா கட்சியினர் மோடியை இரும்பு மனிதன் என விளம்பரம் வருகின்றனர் அந்த இரும்பு மனிதரையே ஓராண்டுகள் டெல்லியில் போராடி விவசாயிகள் ஆட்டிப் பார்த்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்க முடியாத மோடியை விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வைத்து தோற்கடித்துள்ளனர். மேலும் இந்தியாவின் ஆட்சி மொழி ஹிந்தியாக இருக்க வேண்டுமென அமித்ஷா தெரிவிக்கின்றனர். பல கலாச்சாரம் உள்ள நாட்டில் இது போன்ற கருத்து தெரிவித்தால் நாட்டை பிரிவினைவாதத்திற்கு கொண்டு சேர்க்கும்.

நிலங்களை அபகரிக்க முயற்சி

இந்த ஆட்சி நீடித்தால் இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும்  ஆபத்து என்றார். வரும்  2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மதவாத சக்திகளை தோற்கடிக்க இந்தியாவில் உள்ள  மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணை வேண்டும் என்றார்.  மோடி, அமித்ஷா எத்தனை ஜாதியினரை அழைத்து கூட்டம் போட்டாலும், காவி கொடி ஒரு நாலும் தமிழ்நாட்டில் நுழையாது, இதற்கு தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தமிழ்நாடு பாஜக தலைவர்  அண்ணாமலை உள்ளிட்டோர் கோவில் நிலங்களை கையகப்படுத்த துடிப்பதாக குற்றம் சாட்டிய அவர், தமிழகத்தில் சிபிஎம் கூட்டணியில் இருந்தாலும் மக்களுக்கு எதிரான திட்டங்களாக இருந்தால் அதனை செயல்படுத்தினால் நிறுத்துவதற்கும் திருத்துவதற்கும் தயங்க மாட்டோம் என கே.பாலகிருஷ்ணன் கூறினார்.