பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை? நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி! 

பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை? நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி! 

லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை? என நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நடிகர் விஷால், தனது 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட்டதாக விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா சார்பில் ஆஜரான வழக்குரைஞர், நீதிமன்ற உத்தரவுப்படி விஷால் தாக்கல் செய்த வங்கி பரிவர்த்தனை படி 80 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும், பணம் இருந்தும் வேண்டுமென்றே தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை விஷால் செலுத்தாமல் இருப்பதாக குற்றம்சாட்டினார். 

அது தொடர்பான மெமோ தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறிய லைகா தரப்பு வழக்கறிஞர் தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையில் பாதி தொகையையாவது டெபாசிட் செய்ய விஷாலுக்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார். 

இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்குரைஞர், மெமோவிற்கு பதில் அளிப்பதற்கு அவகாசம் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பணத்தை ஏன் இன்னும் திரும்ப செலுத்தாமல் இருக்கிறீர்கள்? செலுத்த வேண்டியது தானே.. என கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்குரைஞர், பணத்தை செலுத்த தாங்கள் தயாராக இருப்பதாகவும், அவர்கள் தான் பேச்சுவார்த்தைக்கு ( Mediation) முன்வருவதில்லை எனவும் கூறினார்.  இதனையடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிக்க: முதலமைச்சர் பற்றி அவதூறு; முன்னாள் அமைச்சருக்கு முன் ஜாமீன்!