சாராயம் என்ன புனித தீர்த்தமா..? சீமான் கேள்வி...!!

சாராயம் என்ன புனித தீர்த்தமா..? சீமான் கேள்வி...!!

திருமண மண்டபங்களில் மதுபானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மது போதைப்பொருள் அல்லாமல் புனித தீர்த்தமா? என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேள்வி எழுப்பினார்.

திருமண மண்டபங்களிலும் விளையாட்டு மைதானங்களிலும் அனுமதி பெற்று மது அருந்தலாம் என உள்துறை செயலாளர் அறிவித்திருந்திருந்தார். இதனை கண்டித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்  வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருமண மண்டபங்களிலும், விளையாட்டு அரங்கங்களிலும் மது வழங்க அனுமதி அளித்து திமுக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மதுவையே முதன்மை வருமானமாக நம்பி அரசை நடத்தும் திமுக அரசு, தற்போது திருமண மண்டபங்கள் வரை மது விற்பனையை விரிவுப்படுத்தி இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது'' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்று கடந்த காலங்களில் கூறிய திமுக, ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் மதுவிற்பனையை மேலும் பல்லாயிரம் கோடிகள் அதிகரிக்கப் புதுப் புது முயற்சிகளை எடுத்து தீவிர திட்டங்களைத் தீட்டி வருகிறது என குற்றம் சாட்டிய சீமான், இந்தியாவிலேயே இலக்கு வைத்து மதுவிற்பனை செய்யும் ஒரே மாநிலம் திராவிட மாடல் ஆட்சி செய்யும் தமிழ்நாடு மட்டுமேயாகும் எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து, தகுதி வாய்ந்த பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்குவதற்கு 7000 கோடிகளை ஒதுக்குவதாக அறிவித்துள்ள திமுக அரசு, அதனை ஈடுகட்ட டாஸ்மாக் வருமானத்தை 45000 கோடிகளிலிருந்து 50000 கோடிகளாக அதிகரித்துக் கோடிக்கணக்கான பெண்களின் குடும்பத்தைக் காவு வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக மதுக்கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு, பார்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி, பெண்களுக்குத் தனி பார் வசதி என அனைத்துச் சீரழிவு முயற்சிகளையும் வேகவேகமாக முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்தினார்.

அடுத்ததாக, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க திமுக அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தபோது, மது போதைப்பொருள் அல்லாமல் புனித தீர்த்தமா? என கேள்வி எழுப்பினார்.


மேலும், தீயப் பழக்கமாக இருந்த மதுவை, திராவிடப் பண்பாடாகவே திமுக அரசு மாற்றி நிறுத்தியுள்ளது வெட்கக்கேடானது எனவும் இது மக்களாட்சிக்கே ஏற்பட்ட மாபெரும் தலைகுனிவு எனவும் கூறியுள்ளார். நிறைவாக, திருமண மண்டபங்களிலும், விளையாட்டு அரங்கங்களிலும் மது விற்பனை செய்யப்படும் என்ற தமிழ்நாட்டைச் சீரழிக்கும் முடிவினை திமுக அரசு திரும்பப்பெறுவதோடு, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.