அங்கன்வாடியில் உணவு சாப்பிட்ட 14 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அங்கன்வாடி மையத்தில் உணவு சாப்பிட்ட 14 குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று வகுப்பிற்கு 17 குழந்தைகள் வந்த நிலையில் அங்கன்வாடி மையத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் அஞ்சலியும் சமையலராக பணியாற்றி வரும் மல்லிகாவும் பணியில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று வழக்கம்போல மதிய உணவை குழந்தைகளுக்கு வழங்கிய நிலையில் உணவை சாப்பிட்ட குழந்தைகள் அனைவரும் அடுத்தடுத்து மயக்கம் ஏற்பட்டதாக கூறியதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தைகளை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவல் அறிந்த வருவாய் கோட்டாட்சியர் உடனடியாக அங்கன்வாடி மையம் மற்றும் மருத்துவமனைக்கு சென்று குழந்தைகள் மற்றும் பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து மருத்துவரிடம் உரிய சிகிச்சை வழங்குமாறு உத்தரவிட்டார்.
இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர் தெரிவிக்கையில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இருந்ததாகவும் இதனை பெற்றோர் சிலர் பார்த்துவிட்டு அங்கன்வாடி மைய ஊழியர்களிடம் கேட்டபோது சரிவர பதிலளிக்காமல் உடனடியாக உணவை உண்ண வேண்டாம் எனக் கூறியதாகவும் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தங்களின் குழந்தைகளை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தூள்ளதாகவும் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.