பட்டாசு வெடிப்பதில் நேரக்கட்டுப்பாடு மீறல்...தமிழ்நாடு முழுவதும் அதிக வழக்குகள் பதிவு!

தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட விதி மீறல் தொடர்பாக, 2 ஆயிரத்து, 206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். 

தீபாவளி பண்டிகையின்போது, காலை 6 மணிமுதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணிமுதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நேரக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இதையும் படிக்க : தீபாவளி விடுமுறை ; ரூ. 467 கோடிக்கு மது விற்பனை!

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும், நேரக் கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்ததாக 2 ஆயிரத்து, 246 பேர் மீது, 2 ஆயிரத்து, 206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இதில் அதிக பட்சமாக சென்னையில் 568 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக, 2 ஆயிரத்து, 95 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் சங்கர் ஜிவால்  தெரிவித்தார்.