வேலூர் சிப்பாய் புரட்சி: 217 ஆம் ஆண்டு நினைவு நாள்; அமைச்சர் துரைமுருகன் அஞ்சலி!

வேலூர் சிப்பாய் புரட்சி: 217 ஆம் ஆண்டு நினைவு நாள்; அமைச்சர் துரைமுருகன் அஞ்சலி!

இந்திய விடுதலை போராட்டங்களுக்கு வித்திட்ட 1806-ம் ஆண்டு ஜீலை 10-ல் வேலூர் கோட்டையில் நடைபெற்ற இந்திய சிப்பாய் புரட்சியின் 217-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி அமைச்சர் துரைமுருகன் சிப்பாய்கள் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.

இந்திய சுதந்திர போராட்டத்தின் விதையாய் தொடங்கிய வேலூர் சிப்பாய் புரட்சியின் 217 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வேலூரில் அனுசரிக்கப்பட்டது.  அதில் குறிப்பாக இந்திய சிப்பாய்கள் காதில் கடுக்கன் அணியக்கூடாது பசுந்தோளால் செய்யப்பட தொப்பிகளை அணிய வேண்டும், மதக்குறிகளை நெற்றியில் இடக் கூடாது, உள்ளிட்ட பல்வேறு அடக்கு முறைகளை கொண்டு வந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிப்பாய்களுக்கு கசையடிகள் வழங்கப்பட்டன. இதன் எதிர்விளைவாக  1806  ஆண்டு ஜீலை 10 ஆம் நாள் நள்ளிரவில் ஆங்கிலேய வீரர்களை இந்திய வீரர்கள் 900 க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக்கொன்றனர். அதனை தொடர்ந்து இருதரப்பினருக்கும் ஏற்பட்ட போரில் மூன்றாயிரத்திற்கும்  மேற்பட்ட புரட்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

வேலூர் கோட்டையில் ஏற்பட்ட, இந்த முதல் சிப்பாய்  புரட்சியே, நம்  நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட முதல் சம்பவம் என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இச்சம்பவம் நினைவாக  வேலூர் கோட்டை எதிரே 1998 ஆம் ஆண்டு தமிழக அரசால் நினைவு தூண் அமைக்கப்பட்டு ஆண்டு தோறும் ஜீலை 10ஆம் நாள் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இப்புரட்சி நடந்து 217 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆட்சி தலைவர் குமாரவேல் பாண்டியன்,வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி, வேலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதையும் படிக்க:"ஆளுநர் ஒரு ஊடு பயிர் மாதிரி தான், முக்கியமான பயிர் கிடையாது" கே எஸ் அழகிரி விமர்சனம்!